“தேசத்துக்காக என் சிந்தூரை அனுப்புகிறேன்” - மணமான 3-வது நாளில் கணவரை எல்லைக்கு அனுப்பிய இளம்பெண்


ஜல்கான்: நாட்டின் பாதுகாப்புக்காக எனது சிந்தூரை நான் அனுப்புகிறேன் என்று கூறு திருமணமான 3-வது நாளில் புது மணப்பெண் ஒரு ராணுவ வீரரான தனது கணவரை எல்லைக்கு அனுப்பிவைத்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம், ஜல்கானில் உள்ள பசோரா தாலுகாவிலுள்ள புங்கான் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் தின்யானேஷ்வர். இவர் இந்தியா ராணுவத்தில் சிப்பாயாக இருக்கிறார். மனோஜுக்கு மே 5ம் தேதி திங்கள்கிழமை தான் திருமணம் முடிந்தது. இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் தொற்றிக்கொள்ள, மனோஜின் விடுமுறை ரத்து செய்யப்பட்டு, அவரை விரைவில் பணிக்கு திரும்புமாறு உத்தரவு அனுப்பப்பட்டது.

உத்தரவு கண்டவுடன் விரைவில் பணித் தலைமையகத்துக்கு திரும்புமாறு பணிக்கப்பட்டிருக்க திருமண நிகழ்வின் கொண்டாட்டங்களும், கனவுகளும் கரை அதன் நினைவுகளை மட்டும் எடுத்துக்கொண்டு மனோஜ் வியாழக்கிழமை பணிக்குத் திரும்பியுள்ளார்.

புது மனைவி, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பசோர் ரயில் நிலையத்துக்கு வந்து மனோஜை வழியனுப்பி வைத்துள்ளனர்.கணவரை வழியனுப்ப வந்த ராணுவ வீரரின் புது மனைவி யாமினி படீல் கூறுகையில், "நாட்டை விட முக்கியமானது எதுவும் இல்லை. நாட்டைப் பாதுகாப்பதற்காக நான் எனது சிந்தூரை இப்போது அனுப்பி வைக்கிறேன்" என்று தெரிவித்தார்.

திருமண நிகழ்வின் ஒரு பகுதியாக மனோஜ் தின்யானேஷ்வரின் வீட்டில் மே 9ம் தேதி சத்யநாராயணா பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு பணிக்கு திரும்புமாறு உத்தரவு வந்ததும், கடமையே முக்கியம் என்று மனோஜ் வியாழக்கிழமை ராணுவப் பணிக்கு திரும்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆபரேஷன் சிந்தூர் பெயர் காரணம்: பொதுவாக திருமணமான இந்து பெண்கள் நெற்றியில் குங்குமம் (சிந்தூர்) வைத்துக் கொள்வது வழக்கம். கணவன் இறந்துவிட்டால் குங்குமம் வைப்பதில்லை. பஹல்காம் தாக்குதல் 25 பெண்களின் குங்குமம் அழிய காரணமாக அமைந்தது. இதை நினைவுகூரும் வகையில்தான் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீதான தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என பிரதமர் மோடி பெயர் சூட்டியதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். கொடூரமான இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக புதன்கிழமை நள்ளிரவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது இந்திய ராணுவம்.

அதன் தொடர்ச்சியாக, இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள எல்லை கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து வியாழக்கிழமை பாகிஸ்தான் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல் முயற்சிகளை இந்தியா முறியடித்தது. அதன் தொடர்ச்சியாக இரவிலும் பாகிஸ்தானின் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் வெற்றிகரமாக வீழ்த்தியது இந்திய பாதுகாப்புப் படை.

எல்லை மாநிலங்களில் தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவுகிறது. ஜம்மு, ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் உள்ள எல்லை கிராமங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு அமலாகியுள்ளது. இதுபோல், தலைநகர் டெல்லியிலும் பாதுகாப்பும், கண்காணிப்பும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

x