சவுதி அமைச்சர் திடீர் வருகை: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்திப்பு


சவுதி அரேபிய வெளியுறவு இணை அமைச்சர் அடெல் அல்ஜுபீர் இந்தியா வந்துள்ளார். அவர் நேற்று டெல்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார்.

பஹல்காம் தீவரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுகிறது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், சவுதி அரேபியாவின் வெளியுறவுத் துறை இணையமைச்சர் அடெல் அல்ஜுபீர் எந்தவொரு முன்னறிவிப்புமின்றி நேற்று இந்தியாவுக்கு வந்தார். டெல்லியில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை அவர் சந்தித்துப் பேசினார். இருவரும் இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் குறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் தளத்தில், “சவுதி அரேபியாவின் வெளியுறவுத் துறை இணையமைச்சர் அடெல் அல் ஜுபீர் உடனான சந்திப்பு சிறப்பாக இருந்தது. தீவிரவாதத்தை எதிர்ப்பதில் இந்தியாவுக்கு உள்ள உறுதிப்பாடு குறித்த தகவலை அவருடன் பகிர்ந்து கொண்டோம்” என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திட்டமிட்டபடி நேற்று நள்ளிரவு இந்தியா வந்தடைந்தார். இரு நாடுகளுக்கிடையிலான 20-வது கூட்டுக் குழு கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள அவர், மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார். பிற்பகலில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவையும் அவர் சந்தித்துப் பேசினார்.

x