சென்னை: இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட் என ஆபரேஷன் சிந்தூர் குறித்து தவெக தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் ராணுவ நடவடிக்கையை பாராட்டியுள்ளார்
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, நள்ளிரவு முதல் இந்திய ராணுவம், 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் நாட்டுக்குள் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா, ஆகிய தீவிரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியானது.
பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்திய ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்திய நிலையில், தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்’ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நமது ஆயுதப் படைகளை நினைத்து பெருமைப்படுகிறோம். ஜெய் ஹிந்த்!’ எனத் தெரிவித்துள்ளார்