புதுடெல்லி: பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள பயங்கரவாத மையங்கள் மீது இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் "வருந்தத்தக்கது" என்று சீனா தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளையும் நிதானத்தைக் கடைபிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, நள்ளிரவு முதல் இந்திய ராணுவம், 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் நாட்டுக்குள் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா, ஆகிய தீவிரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியானது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவு அமைச்சகம், ‘இன்று அதிகாலையில் இந்தியாவின் இராணுவ நடவடிக்கையை சீனா வருத்தமளிப்பதாகக் கருதுகிறது. இப்போது நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலை குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம். இந்தியாவும் பாகிஸ்தானும் எப்போதும் ஒருவருக்கொருவர் அண்டை நாடுகளாகவே இருக்கும். அவர்கள் இருவரும் சீனாவின் அண்டை நாடுகளும் கூட.
சீனா அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்க்கிறது. அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் பெரிய நலனுக்காக இரு தரப்பினரும் செயல்படவும், அமைதியாக இருக்கவும், நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், நிலைமையை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர்க்கவும் நாங்கள் வலியுறுத்துகிறோம்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.