வக்பு சட்டத்துக்கு எதிரான வழக்கு: மே 15-க்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு


புதுடெல்லி: வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்களை உச்ச நீதிமன்றம் மே 15-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. புதிய தலைமை நீபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்ற பிறகு அவரது தலைமையிலான அமர்வு இந்த மனுக்களை விசாரிக்க உள்ளது.

மத்திய அரசின் வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தனிநபர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் ஆகியோரை கொண்ட அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி, “இந்த வழக்கு நியாயமாக ஒவ்வொரு நாளும் விசாரிக்கப்பட வேண்டும். வரும் மே 13-ம் தேதி நான் ஓய்வு பெறுவதால் வழக்கின் அடுத்த விசாரணையை மே 15-க்கும் தேதிக்கு தள்ளி வைக்கிறேன். இடைக்கால தீர்ப்பு அல்லது உத்தரவு எதுவும் நான் பிறப்பிக்க விரும்பவில்லை" என்றார்.

இதனால் இந்த வழக்கு புதிய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன் மே 15-ம் தேதி பட்டியலிப்பட உள்ளது. கடந்த விசாரணையின்போது, “வக்பு சொத்துகளை மே 5 வரை ரத்து செய்ய மாட்டோம். மத்திய வக்பு கவுன்சில் மற்றும் வாரியங்களுக்கு எந்த நியமனமும் செய்ய மாட்டோம்" என மத்திய அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வாக்குறுதிகளை சில மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி நீதிபதிகளுக்கு நினைவூட்டினார். இந்த வாக்குறுதிகள் அடுத்த விசாரணை வரை நீடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

x