புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்புத் துறை செயலருடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக மத்திய அரசு குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில், தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்போம் என்று அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகள் தெரிவித்துள்ளன.
‘‘தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், அவர்களுக்கு உதவியவர்கள் மீது இந்தியா கடும் நடவடிக்கை எடுக்கும். அந்த நடவடிக்கை அவர்கள் இதுவரை கற்பனை செய்து கூட பார்க்க முடியாததாக இருக்கும்’’ என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக எச்சரித்துள்ளார். அதற்கேற்ப முதல் கட்டமாக சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் விசா ரத்து, வர்த்தக ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. அத்துடன் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகளில் பலர் திரும்ப இந்தியாவுக்கு அழைக்கப்பட்டனர். அதேபோல் இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் அதிகாரிகள் பலரை திரும்பி பாகிஸ்தானுக்கு செல்ல மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. போர் விமானங்கள், போர்க் கப்பல்கள் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன. மேலும், பிரதமர் மோடி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். விமானப் படை தளபதி மார்ஷல் அமர் பிரீத் சிங்கை நேற்றுமுன்தினம் பிரதமர் மோடி சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தினார். அதன் அடுத்த கட்டமாக பாதுகாப்புத் துறை செயலர் ராஜேஷ் குமார் சிங்கை நேற்று டெல்லியில் சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த சந்திரப்பு அரை மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. தவிர ராணுவம், கப்பல் படை, விமானப் படை தளபதிகள் மற்றும் முக்கிய உயரதிகாரிகளை பிரதமர் மோடி அடுத்தடுத்து சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.