நேஷனல் ஹெரால்டில் சிக்கும் சோனியா, ராகுல்: 1950-லேயே நேருவை எச்சரித்த வல்லபாய் படேல்!


புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் 1950ம் ஆண்டே இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல், அப்போதைய பிரதமர் நேருவுக்கு எச்சரிக்கை கடிதங்களை எழுதியுள்ளார்

கடந்த 1937-ம் ஆண்டில் நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட்டட் ஐர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் (ஏஜேஎல்) சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியிடப்பட்டு வந்தது. இதில் 5,000-க்கும் மேற்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தனர். கடந்த 2008-ம் ஆண்டில் நேஷனல் ஹெரால்டு மூடப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சிக்கு ஏஜேஎல் நிறுவனம் ரூ.90 கோடி கடன்பட்டிருந்தது.

இந்த சூழலில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்குதாரராக உள்ள யங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ரூ.50 லட்சத்தை மட்டும் செலுத்தி ஏஜேஎல் நிறுவனத்தை கையகப்படுத்தியது. மீதமுள்ள ரூ.89.50 கோடியை காங்கிரஸ் ரத்து செய்தது. இதன்மூலம் ஏஜேஎல் நிறுவனத்தின் ரூ.5,000 கோடி சொத்துகளை யங் இந்தியா பிரைவேட் நிறுவனம் முறைகேடாக அபகரித்திருப்பதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டி உள்ளது.

இந்த வழக்கில் முதல்கட்ட குற்றப் பத்திரிகையை கடந்த மாதம் 9-ம் தேதி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்தது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சாம் பித்ரோடா, சுமன் துபே உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த சூழலில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்படெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோகனே உத்தரவிட்டார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கும் படேலின் எச்சரிக்கை கடிதங்களும்: நேஷனல் ஹெரால்டு ஊழல் முறைகேட்டின் ஆழத்தை கண்டறிய 1950 ஆம் ஆண்டிற்கு செல்ல வேண்டும். இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல், மே 1950 இல் பல கடிதங்கள் மூலம் இவ்விவகாரத்தில் நேரு குடும்பத்திற்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளார். இந்த கடிதங்கள் எல்லாம் சர்தார் படேலின் கடிதம் என்ற புத்தகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. நிதி திரட்டும் நடவடிக்கைகளுக்கு நேஷனல் ஹெரால்டை பயன்படுத்துவது குறித்து அப்போதே படேல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தார். நிதி பரிவர்த்தனைகளில் அரசாங்கத்தின் செல்வாக்கை தவறாகப் பயன்படுத்தி நிதிகளை திரட்டியதாகவும் அப்போது புகார்களை வைத்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஜவஹர்லால் நேருவை, வல்லபாய் படேல் வெளிப்படையாக எச்சரித்தார். சந்தேகத்திற்குரிய அல்லது கறைபடிந்த ஆதாரங்களில் இருந்து நிதியைப் பெறுவதைத் தவிர்க்குமாறு அவருக்கு அறிவுறுத்தினார். அப்போதே இதை தவிர்க்கும் வகையில் மழுப்பலாக நேரு எழுதிய பதில் கடிதங்கள் பட்டேலின் புகார்களில் உள்ள உண்மைகளை மேலும் வலுவாக்கியது. நிதி முறைகேடு, பரிவர்த்தனை முறைகேடுகளை ஒதுக்கி தள்ளும் வகையில் நேரு அளித்த பதில்கள் இப்போது கடுமையான விமர்சனங்களை, சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் வளர்ந்து வளர்ந்து தற்போது பல கோடி ரூபாய் ஊழலாக உருவெடுத்து உள்ளதாக பாஜகவினர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சிக்கி உள்ளனர். இவர்கள் இருவரும் பிரபல நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனத்தின் பங்குதாரர்களாக உள்ளனர். தற்போது செயல்படாத நேஷனல் ஹெரால்டின் சொத்துக்களை சத்தமில்லாமல் கையகப்படுத்த நேரு குடும்பம் முயல்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தனிப்பட்ட செல்வாக்கிற்காக அரசியல் நிதியை, சலுகைகளை வேண்டுமென்றே துஷ்பிரயோகம் செய்ததாகக் அமலாக்கத்துறை இந்த வழக்கில் குற்றம்சாட்டியுள்ளது.

மே 5, 1950 அன்று, இந்திய விமானப்படையின் ஆட்சேபனைகளை மீறி அரசாங்க ஒப்பந்தத்தைப் பெற்றதாகக் ஹிமாலயன் ஏர்வேஸ் நிறுவனத்தின் மீது புகார்கள் வைக்கப்பட்டது. இந்த நிறுவனத்திற்கு நெருக்கமான தனிநபர்கள் நேஷனல் ஹெரால்டுக்கு ₹75,000 நன்கொடை அளித்ததாக அப்போதே புகார் வைக்கப்பட்டது. இதுகுறித்து நேருவுக்கு படேல் எச்சரிக்கையுடன் கடிதம் ஒன்றையும் எழுதி இருந்தார். அப்போதுதான் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அதாவது ஒரு நிறுவனத்திற்கு அரசின் ஒப்பந்தத்தை வழங்குவதற்காக, அந்த நிறுவனத்திடம் இருந்து தங்களின் தனி நிறுவனத்திற்கு நன்கொடை பெற்று ஏமாற்றியதாக புகார் வைக்கப்பட்டது. இந்த புகாரில் இருந்து படேல் பின்வாங்கவில்லை. நன்கொடையாளர்களில் ஒருவரான அகானி ஏற்கனவே வங்கி மோசடி குற்றச்சாட்டை எதிர்கொண்டவர் என்பதையும் படேல் சுட்டிக்காட்டினார்.

முக்கியமாக அப்போதைய மத்திய அமைச்சர் அகமது கித்வாய், லக்னோவில் உள்ள சர்ச்சைக்குரிய தொழிலதிபர்களான ஜே.பி.ஸ்ரீவஸ்தவா போன்றவர்களிடம் இருந்து பத்திரிகைக்காக நிதி பெற்றதையும் பட்டேல் குற்றச்சாட்டாக வைத்தார். ஆனால் நேரு இதற்கு அளித்த பதில் தெளிவற்றது. அவர் அப்போது ஹெரால்டின் பொது மேலாளராக இருந்த தனது மருமகன் பெரோஸ் காந்தியிடம் இது பற்றி விசாரிக்க சொல்வதாக கூறி அந்த விவகாரத்தை திசைதிருப்பினார். அதாவது எந்த விதமான உறுதியும் அளிக்காமல் புகார்களை திசை திருப்பும் வகையில் நேரு பேசியதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. மனம் தளராத படேல் அடுத்த நாளே இன்னொரு கடிதம் எழுதினார். அவரது மே 6 கடிதத்தில், நேருவின் திசைதிருப்பலுக்கு எதிராக பதில் கேள்விகளை எழுப்பி இருந்தார். அதில், ‘சில நன்கொடைகளை அளித்த தனியார் நிறுவனங்கள் சந்தேகம் அளிக்கின்றன. அந்த நிறுவனங்கள் இதற்கு முன் நன்கொடை அளித்ததே இல்லை. அவர்களின் செயல்கள் சந்தேகம் தருகின்றன’ என்று குற்றச்சாட்டு வைத்தார்.

இதுகுறித்து நேரு மீண்டும் மேம்போக்காக பதிலளித்தார். அதில், ‘பத்திரிகையின் நிதிகளில் தனக்கு தொடர்பு இல்லை. நான் மூன்று ஆண்டுகளாக அதில் ஈடுபடவில்லை. மிருதுளா என்ற ஒருவருக்கு பொறுப்பை ஒப்படைத்துவிட்டேன். அதில் சில தவறுகள் நடந்திருக்கலாம், ஆனால் நஷ்டம் மற்றும் லாபம் சம்பந்தப்பட்ட வணிக விஷயமாக எனக்கு எதுவும் தெரியாது.. அதில் நான் பொறுப்பேற்க முடியாது’ என்று மழுப்பலாக பதில் அளித்தார். சுப்பிரமணிய சுவாமியின் குற்றச்சாட்டு பாஜக மூத்த தலைவரும், வழக்கின் மனுதாரருமான டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி, பொதுச் சொத்துகளை அபகரிக்க நேரு குடும்ப மேற்கொண்ட சதி இது என்று குற்றஞ்சாட்டினார். ‘இது காங்கிரஸ் குடும்பம் நடத்தும் நிறுவனமாக இது செயல்படுகிறது. அங்கு அரசியல் செல்வாக்கு மூலம் தனியார் லாபத்திற்காக நிதி திரட்டுகின்றனர்’ என்ற சுப்பிரமணிய சுவாமியின் கூற்றுகள் பாஜகவின் விமர்சனத்துடன் ஒத்துப் போகின்றன.

எனவே இது அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கை என்ற காங்கிரஸின் வாதம், வரலாற்று சான்றுகள் மற்றும் அமலாக்கத் துறையின் விசாரணையின் முன்பு தோல்வியடைகிறது என பாஜக தரப்பு குற்றம்சாட்டுகிறது. இதனால் இப்போது சர்தார் வல்லபாய் படேலின் கடிதங்களை முன்னிலைப்படுத்தி காங்கிரஸை நோக்கி அழுத்தமான கேள்விகளை பாஜக முன்வைக்கிறது. மேலும், படேலின் தொலைநோக்கு பார்வை கொண்ட எச்சரிக்கை மற்றும் காங்கிரஸ் கட்சியின் குடும்ப அரசியல் குறித்த வாதங்களையும் பாஜக எழுப்ப ஆரம்பித்துள்ளது.

x