கொல்கத்தா: கொல்கத்தாவிலுள்ள ஒரு ஓட்டலில் ஏற்பட்ட தீவிபத்தில் பெண், 2 குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். இதில் 3 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவின் மத்தியப் பகுதியில் புர்ராபஜார் மெச்சுவாபட்டி என்ற பகுதி உள்ளது. இந்தப்பகுதியில் ரித்துராஜ் என்ற ஓட்டல் அமைந்துள்ளது.
இந்த ஓட்டலில் நேற்று இரவு 8.15 மணியளவில் தீ ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால் ஓட்டலில் தங்கியிருந்தோர் பயத்தில் அலறியடித்துக் கொண்டு ஓடினர். மாடிப் பகுதியிலுள்ள அறைகளில் தங்கி இருந்தவர்கள் பலரும் வேகமாக வெளியேற தொடங்கினர்.
தகவல் அறிந்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டங்களுக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து ஓட்டலுக்குள் சென்று தீயணைப்பு வீரர்கள் சோதனை செய்தனர். அப்போது தீயில் கருகிய நிலையில் 13 பேரின் உடல்களை அதிகாரிகள் மீட்டனர்.
இதில் ஒரு பெண், 2 குழந்தைகளும் அடங்குவர். தீயில் இருந்து தப்பிக்க ஹோட்டல் ஊழியர் ஒருவர் மாடியில் இருந்து கீழே குதித்ததில் உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்தது. உயிரிழந்த 14 பேரில் 3 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு(எஸ்ஐடி) விசாரணை நடத்தும் நடத்தும் என்று கொல்கத்தா போலீஸார் தெரிவித்தனர்.