சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்: பாஜகவின் மாஸ்டர் பிளான்!


புதுடெல்லி: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளித்துள்ளது.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரியாக கணக்கெடுப்பு நடைபெறும். சாதிவாரி கணக்கெடுப்பு வெளிப்படையாக பதிவு செய்யப்படும். எனவே மாநில அளவில் தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அவசியமில்லை” என தெரிவித்தார்.

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தேசிய அளவிலும், மாநில அளவிலும் கடந்த 2024 மக்களவைத் தேர்தல் சமயத்திலேயே பெரிய அளவில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. மேலும், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தன. பாஜக சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்த சூழலில் பாஜக மாஸ்டர் பிளானாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

x