ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் கடந்த 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த சம்பவத்துக்கு பிறகு காஷ்மீருக்கு சுற்றுலா வந்த ஏராளமானோர் தங்கள் பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு சொந்த ஊர் திரும்பினர். மேலும் காஷ்மீருக்கு வரவிருந்த பலர் தங்கள் பயணத்தை ரத்து செய்தனர். இதனால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி வருகின்றன.
இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதை கருத்தில் கொண்டு
காஷ்மீரில் பொது பூங்காக்கள், தோட்டங்களை உள்ளடக்கிய 87 சுற்றுலா தலங்களில் 48 இடங்களை மாநில அரசு தற்காலிகமாக மூடியுள்ளது.
தூஷ்பத்ரி, கோகர்நாக், டக்சம், சிந்தன் டாப், அச்சாபல், பங்கஸ் பள்ளத்தாக்கு, மார்கன் டாப், டோசாமைதான் ஆகியவை மூடப்பட்ட சுற்றுலா தலங்களில் அடங்கும்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “மூடப்பட்ட சுற்றுலாத் தலங்கள் காஷ்மீரின் தொலைதூரப் பகுதிகளில் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் திறக்கப்பட்ட சில புதிய இடங்களும் இதில் அடங்கும். பாதுகாப்பு மறுஆய்வு நடைமுறைகள் தொடர்வதால் வரும் நாட்களில் மேலும் சில சுற்றுலா தலங்கள் மூடப்படலாம்" என்றனர்.