கொல்கத்தா: கொல்கத்தா ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உள்பட 14 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் ஃபால்பட்டி மச்சுவா அருகே உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று இரவு 8:15 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 6 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணிக்கும் பணியில் ஈடுபட்டன.
இன்று அதிகாலை தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து 14 பேர் உயிரிழந்த நிலையிலும், 13 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். உயிரிழந்தவர்களில் 11 ஆண்கள், ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் அடங்குவர்.
5 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து தப்பிக்க, பலர் ஜன்னல் வழியாக குதித்து உள்ளனர். இந்த தீ விபத்தில் கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பிரபுவின் 2 குழந்தைகள், பிரபுவின் மாமனார் என 3 பேர் பலியாகி உள்ளனர். அவர்கள் அந்த ஹோட்டலில் தங்கி இருந்த நிலையில், ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பலியாகியுள்ளனர்.
இந்த ஹோட்டலில் மீட்புப் பணிகள் இன்னும் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த தீவிபத்து தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை