'ஷரியத்', 'காஜி’ நீதிமன்றங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை; அதன் உத்தரவுகள் செல்லாது - உச்ச நீதிமன்றம் அதிரடி


புதுடெல்லி: 'காஜி நீதிமன்றம்', ‘தாருல் காஜா’, ‘காஜியத் நீதிமன்றம்', 'ஷரியா நீதிமன்றம்' போன்ற எந்தப் பெயரிலும் அழைக்கப்பட்டாலும் அவை சட்டத்தில் அங்கீகாரம் பெறவில்லை என்றும், அவை வழங்கிய எந்த உத்தரவும் சட்டத்தில் செயல்படுத்தப்படாது என்றும் உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

குடும்ப பிரச்சினைக்கு தானே காரணம் என்ற அடிப்படையில் தனக்கு எந்த ஜீவனாம்சமும் வழங்கக்கூடாது என்ற குடும்ப நீதிமன்றத்தின் முடிவை உறுதி செய்த அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஒரு பெண் தாக்கல் செய்த மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் அமர்வு விசாரித்தது. குடும்ப நீதிமன்றம் இத்தகைய முடிவை எடுக்க காஜி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சமரசப் பத்திரம் காரணம் என்று வாதிடப்பட்டது.

இவ்வழக்கை நீதிபதி சுதன்ஷு துலியா மற்றும் நீதிபதி அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதில் குடும்ப நீதிமன்றத்தின் அணுகுமுறையை விமர்சித்த நீதிபதி அமானுல்லா அளித்த தீர்ப்பில், ‘காஜி நீதிமன்றம்', 'தாருல் காஜா’, ‘கஜியத் நீதிமன்றம்', 'ஷரியா நீதிமன்றம்' போன்ற எந்தப் பெயரால் அழைக்கப்பட்டாலும் அவற்றுக்கு சட்டத்தில் அங்கீகாரம் இல்லை. அத்தகைய அமைப்புகளின் எந்தவொரு முடிவும், எந்தப் பெயரால் பெயரிடப்பட்டாலும், யாரையும் கட்டுப்படுத்தாது மற்றும் எந்தவொரு கட்டாய நடவடிக்கையையும் இதன் மூலம் செயல்படுத்த முடியாது. அத்தகைய அமைப்புகளின் அறிவிப்பு/முடிவு என்பது எந்த சட்டத்துடனும் முரண்படாத வகையில் பாதிக்கப்பட்ட தரப்பினர் அதனை ஏற்றுக்கொள்ளும் போது சிக்கல் எழாது. அப்படியிருந்தும், அத்தகைய அமைப்புகளின் முடிவுகள், அதை ஏற்றுக்கொள்ளத் தேர்ந்தெடுக்கும் தரப்பினரிடையே மட்டுமே செல்லுபடியாகும், மூன்றாம் தரப்பினருக்கு அது பொருந்தாது” என்று குறிப்பிட்டுள்ளார்

இவ்வழக்கில் மேல்முறையீட்டாளரான மனைவியின் திருமணம் பிரதிவாதியான கணவருடன் 24.09.2002 அன்று இஸ்லாமிய வழக்கப்படி நடந்தது. இது இருவருக்கும் இரண்டாவது திருமணம். 2005 ஆம் ஆண்டில் கணவர் மத்தியப் பிரதேசத்தின் போபாலில் உள்ள காஜி நீதிமன்றத்தில் மேல்முறையீட்டாளருக்கு எதிராக விவாகரத்து வழக்கு தாக்கல் செய்தார், இது 22.11.2005 அன்று இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட சமரசத்தின் அடிப்படையில் தள்ளுபடி செய்யப்பட்டது.

2008 ஆம் ஆண்டில், கணவர் காஜியாத் நீதிமன்றத்தில் விவாகரத்துக்காக மற்றொரு வழக்கைத் தாக்கல் செய்தார். அதே ஆண்டில், மனைவி குடும்ப நீதிமன்றத்தில் பிரிவு 125 சிஆர்பிசி- இன் கீழ் ஜீவனாம்சம் கோரி மனு தாக்கல் செய்தார். 2009 ஆம் ஆண்டில், காஜா நீதிமன்றம் இவர்களுக்கான விவாகரத்தை அனுமதித்த பிறகு தலாக்னாமா அறிவிக்கப்பட்டது.

கணவர் மேல்முறையீட்டாளரை விட்டுப் பிரியவில்லை என்றும், மாறாக, அவளது இயல்பு மற்றும் நடத்தை காரணமாக, சர்ச்சைக்கும் அதன் விளைவாக திருமண வீட்டை விட்டு வெளியேறுவதற்கும் அவளே முக்கிய காரணம் என்றும் குடும்ப நீதிமன்றம் தெரிவித்துள்ளதை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது. அதேபோல இது இரு தரப்பினரின் இரண்டாவது திருமணம் என்பதால், கணவரிடம் வரதட்சணை கோருவதற்கான சாத்தியக்கூறு இல்லை என்ற குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவையும் உச்ச நீதிமன்றம் விமர்சித்தது.

மேலும் அந்த தீர்ப்பில், ‘சமரசப் பத்திரத்தில் மேல்முறையீட்டாளர் தனது தவறை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படும் உண்மையை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சமரசப் பத்திரத்தை வெறுமனே ஆராய்ந்தாலே, அது அத்தகைய ஒப்புதலைப் பதிவு செய்யவில்லை என்பது தெளிவாகத் தெரியும். 2005 ஆம் ஆண்டில் கணவரால் தொடுக்கப்பட்ட முதல் 'விவாகரத்து வழக்கு' இந்த சமரசத்தின் அடிப்படையில் தள்ளுபடி செய்யப்பட்டது, இதில் இரு தரப்பினரும் ஒன்றாக வாழ முடிவு செய்து, மற்ற தரப்பினருக்கு புகார் செய்ய எந்த வாய்ப்பையும் வழங்க மாட்டோம் என்று ஒப்புக்கொண்டனர். எனவே, மேல்முறையீட்டாளரின் ஜீவனாம்ச கோரிக்கையை நிராகரிப்பதற்கான அடிப்படை காரணமே வெளிப்படையாக நிலையானதாக இல்லை என தெரிகிறது," என்று நீதிமன்றம் கூறியது.

மேலும், குடும்ப நீதிமன்றத்தில் பராமரிப்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து, மேல்முறையீட்டாளரான மனைவிக்கு மாதத்திற்கு ரூ.4,000 ஜீவனாம்ச தொகையாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இவ்வழக்கில் நீதிபதி சுதன்ஷு துலியா மற்றும் நீதிபதி அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஷரியாத் நீதிமன்றங்கள் மற்றும் ஃபத்வாக்களுக்கு சட்டப்பூர்வ அனுமதி இல்லை என்று 2014 ஆம் ஆண்டு விஷ்வ லோச்சன் மதன் வெர்சஸ் யூனியன் ஆஃப் இந்தியா வழக்கில் தீர்ப்பளித்ததையும் மேற்கோள் காட்டி குறிப்பிட்டது.

x