போலீஸ் அதிகாரியை அடிக்க கை ஓங்கிய சித்தராமையா; பொதுக்கூட்ட மேடையில் அதிர்ச்சி - வைரல் வீடியோ!


பெங்களூரு: மத்திய அரசுக்கு எதிராக பெலகாவியில் நடந்த போராட்டத்தில், கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசும்போது பாஜகவினர் கோஷம் எழுப்பினர். இதனால் கோபமடைந்த சித்தராமையா கூடுதல் எஸ்.பியை அடிப்பதற்காக கையை ஓங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் பெட்ரோல், சமையல் காஸ் விலை உயர்வுக்காக மத்திய அரசை கண்டித்து, காங்கிரசார் மாநிலம் முழுதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பெலகாவியில் நேற்று நடந்த போராட்டத்தில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் முதல்வர் சித்தராமையா பேசிக்கொண்டிருந்த போது, கூட்டத்திற்குள் புகுந்த பாஜக மகளிரணியினர் சித்தராமையாவுக்கு கருப்பு கொடி காண்பித்தனர். மேலும் சித்தராமையாவுக்கு எதிராக கோஷமிட்டனர். பாஜகவை சேர்ந்த அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு காங்கிரஸ் பொதுக்கூட்டத்துக்குள் நுழைந்து சித்தராமையாவுக்கு கருப்பு கொடி காட்டி அவருக்கு எதிராக கோஷமிட்டது தெரியவந்தது.

இதனால் கோபமடைந்த சித்தராமையா, அருகில் இருந்த தார்வாட் கூடுதல் எஸ்.பி நாராயண் பரமணியை பார்த்து, ''என்னய்யா இது...'' என்றபடி, அவரை அடிக்க கையை ஓங்கினார். பின், ஒருவழியாக சுதாரித்து நிறுத்திக் கொண்டார். இதனையடுத்து பாஜகவினர் கைது செய்யப்பட்டு, போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டனர். இந்த நிலையில், காவல்துறை அதிகாரியை முதல்வர் சித்தராமையா அடிக்க கை ஓங்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

x