பாகிஸ்தான் அரை மணி நேரமல்ல, அரை நூற்றாண்டு பின்தங்கியுள்ளது என ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசதுதீன் ஒவைசி கூறினார்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்ததை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் புட்டோ, பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஸ் அப்பாஸி ஆகியோர் இந்தியாவுக்கு போர் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிம், பர்பானி என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசதுதீன் ஒவைசி பேசியதாவது:
பாகிஸ்தானில் அமர்ந்துகொண்டு முட்டாள்தனமாக பேசுபவர்களுக்கு சொல்கிறேன். நீங்கள் இந்தியாவை விட அரை மணி நேரமல்ல, அரை நூற்றாண்டு பின்தங்கி இருக்கிறீர்கள். உங்கள் நாட்டின் பட்ஜெட், எங்கள் ராணுவ பட்ஜெட்டுக்கு கூட சமமாக இல்லை.
தாங்கள் அணு ஆயுத நாடாக இருப்பது பற்றி பாகிஸ்தான் எப்போதும் பேசி வருகிறது. நீங்கள் ஒரு நாட்டுக்குள் நுழைந்து அப்பாவி மக்களை கொன்றால், அந்த நாடு அமைதியாக பார்த்துக் கொண்டிருக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நமது மக்களை கொன்று, அவர்களை மத அடிப்படையில் குறி வைத்து ஐஎஸ்எஸ் போல பாகிஸ்தான் செயல்பட்டுள்ளது. பாகிஸ்தான் நீண்ட காலமாக இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறது. லஷ்கர் இ-தொய்பா, பாகிஸ்தான் அரசின் சட்டவிரோத குழந்தை. இவ்வாறு ஒவைசி பேசினார்.