ஜம்மு காஷ்மீரில் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல்: குப்வாராவில் சமூக ஆர்வலர் சுட்டுக் கொலை


ஜம்மு-காஷ்மீர்: பஹல்காம் தாக்குதல் பரபரப்பு அடங்குவதற்குள், குப்வாரா மாவட்டத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் காஷ்மீரில் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், சனிக்கிழமையன்று ஜம்மு-காஷ்மீரின் குப்வாராவில் 45 வயதான சமூக ஆர்வலர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

குப்வாரா மாவட்டத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 26) இரவு கண்டி காஸில் உள்ள வீட்டிற்குள் சமூக ஆர்வலரான குலாம் ரசூல் மக்ரே மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் ராணுவம் கூறியுள்ளது.

இயற்கை எழில் கொஞ்சும் பஹல்காம், இந்தியாவின் ’மினி சுவிட்சர்லாந்து’ என்று அழைக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி இங்கு திடீரென 3 பயங்கரவாதிகள் நுழைந்தனர். அப்போது, அங்கிருந்த சுமார் ஆயிரம் சுற்றுலா பயணிகளை வளைத்து துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 2 வெளிநாட்டவர் உட்பட 26 உயிர்கள் பரிதாபமாகப் பலியாகினர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை இந்தியா வேட்டையாடும் என்று பிரதமர் நரேந்திர மோடி சபதம் செய்துள்ளார்.

இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது, இதில் முக்கியமான சிந்து நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது மற்றும் நாட்டின் தூதரக ஊழியர்களை குறைப்பது ஆகியவை அடங்கும்.

மேலும், பாகிஸ்தான் நாட்டினருக்கான விசா சேவைகளையும் வெளியுறவு அமைச்சகம் நிறுத்தி வைத்துள்ளது. ஏற்கெனவே உள்ள விசாக்களையும் ரத்து செய்து பாகிஸ்தானியர்களை இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது.

x