ஐஏஎஸ் தேர்வில் ராமநாதபுரம் இளைஞர் தமிழக அளவில் 5-ம் இடம்!


ஸ்ரீ ரஷத்

ராமநாதபுரம் அரண்மனை தெருவைச் சேர்ந்த கணினி பொறியாளர் ராம்பிரகாஷ், லட்சுமி தம்பதியின் மகன் ஸ்ரீ ரஷத் (22). இவர் சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 52ம் இடமும், தமிழக அளவில் 5-ம் இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இவர் பள்ளிப் படிப்பை ராமநாதபுரத்தில் படித்துள்ளார். ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை விவேகானந்தா வித்யாலயா பள்ளியிலும், 6 முதல் 10ம் வகுப்பு வரை இன்ஃபன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளியிலும், பிளஸ் 1, பிளஸ் 2 மண்டபத்தில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியிலும் படித்துள்ளார்.

அதனையடுத்து பி.ஏ. பொருளாதார பட்டப் படிப்பை புதுடில்லி மோதிலால் நேரு கல்லூரியிலும் படித்துள்ளார். 2023ம் ஆண்டு பட்டப் படிப்பை முடித்ததும் டில்லியிலேயே தங்கி அங்குள்ள ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் படித்துள்ளார். பின்னர் முதல் முறையாக யுபிஎஸ்சி தேர்வு எழுதி, ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். தகவல் தெரிந்ததும் தாய், தந்தை, தாத்தா ஆகியோர் ஸ்ரீ ரஷத்துக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்தனர்.

இது குறித்து ஸ்ரீ ரஷத் கூறுகையில், சிறு வயது முதலே முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறிய அறிவுரைகள் மனதில் ஆழமாக பதிந்தன. அவரது நூல்களை அதிகம் படித்துள்ளேன். அதனால் பொதுமக்களுக்கு சேவை செய்யும் துறையில் வர வேண்டும் என்பதற்காக ஐஏஎஸ் படிக்க விரும்பினேன். மேலும் எனது தாத்தா தனபாலன், நீண்ட காலமாக ராமநாதபுரம் மாவட்ட வர்த்தக சங்கத் தலைவராக இருந்து மக்கள் சேவையாற்றி வந்தார்.

எனது தாத்தா மற்றும் எனது தாய், தந்தை ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என என்னை அடிக்கடி ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பர். அதேபோல் எனது ஆசிரியர்களும் எனக்கு உந்துகோலாக இருந்தனர். ஐஏஎஸ் அதிகாரியாகி நிதித் துறை, கல்வி, சுகாதாரத்தில் மக்களை மேம்படுத்த பாடுபடு வேன் எனத் தெரிவித்தார்.

x