புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், கோவை 100 சதவீத எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக வரும் நவம்பரில் அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கடந்த 2022-23ம் ஆண்டு முதல் 15 வயதுக்கு மேற்பட்ட எழுத, படிக்கத் தெரியாத அனைவருக்கும் அடிப்படை கல்வி வழங்கும் வகையில், தமிழ்நாடு பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தன்னார்வலர் முறையில் 38 மாவட்டங்களில் நடைமுறையில் உள்ளது. புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின்படி 2022-27ம் ஆண்டுகளில் 100 சதவீத எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்களது அடிப்படை எழுத்தறிவை பெற்று பயனடைந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் கடந்த 2022 முதல் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 15 வயதுக்கு மேற்பட்ட எழுத்தறிவு இல்லாத நபர்களை கண்டறிந்து எழுத்தறிவு வழங்கப்பட்டு வருகிறது.
இது குறித்து, கோவை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழ் மொழியில் எழுத, படிக்கத் தெரியாத மற்றும் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை எண்ணறிவை பெறாத நபர்கள் கணக்கெடுக்கப்பட்டனர். பின்னர் தன்னார்வலர்கள் மூலம் அவர்களுக்கு பெயர் எழுதுதல், ஆதார் எண், செல்போன் எண், வங்கி கணக்கு எண், அவரவர் பேருந்துகளில் சென்று வரும் இடங்களின் பெயர் விவரம், பேருந்து எண், ஏடிஎம், அஞ்சல் எண் ஆகியவைகளை கற்பித்து எழுத்தறிவு வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக 6 மாத கால பயிற்சியில் 200 மணி நேரம் அவர்களுக்கு கற்பிக்கப்பட்டு தேர்வு வைக்கப்படுகிறது. தேர்வுக்குப் பின்னர் அவர்களுக்கு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இந்த சான்றிதழை வைத்து திறந்தவெளி பள்ளி கல்வி மூலம் 5-ம் வகுப்புக்கு நேரடியாக தேர்வெழுதலாம். தேர்ச்சி பெற்று 8ம் வகுப்பு, தொடர்ந்து 10-ம் வகுப்பு தேர்வை தனித்தேர்வர்களாக எழுத முடியும். கோவை மாவட்டத்தைப் பொருத்தவரை மொத்தம் உள்ள 15 வட்டாரங்களில் கடந்த 2022 - 23ல் 19,087 பேரும், 2023 - 24ல் 19,087 பேரும், 2024 - 25ல் 20,199 பேரும் எழுத்தறிவு பயிற்சி பெற்று தேர்ச்சியடைந்துள்ளனர்.
தற்போது 2-ம் கட்டமாக 796 கற்பிப்போர் மையங்கள் வழியாக எழுத்தறிவு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் 7,246 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களுக்கு வரும் ஜூன் மாதத்தில் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மத்திய அரசு நிர்ணயித்த இலக்கை முடித்துள்ளோம். தொடர்ந்து எழுத்தறிவு இல்லாத நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
தமிழகத்தில் நீலகிரி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் 100 சதவீத எழுத்தறிவு பெற்ற மாவட்டங்களாக விரைவில் அறிவிக்கப் பட உள்ளன. அதன் தொடர்ச்சியாக வரும் நவம்பர் மாதத்துக்குள் கோவை மாவட்டம் 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக அறிவிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.