புதுச்சேரி: கல்வி மேம்பாட்டுக்காக கோடை விடுமுறையில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 100 ஆசிரியர்களுக்கு ஆரோவில்லில் பயிற்சி அளிக்க கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
கல்வி, வளர்ச்சி மேம்பாட்டுக்காக மத்தியப் பிரதேச கல்வித்துறையின் மூத்த அதிகாரிகள், கல்வியாளர்கள் ஆரோவில் வந்துள்ளனர். ஆரோவில்லில் பள்ளிகள், திட்டங்களை பார்வையிட்டு கலந்துரையாடிய பிறகு, கோடை விடுமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நூறு மத்திய பிரதேச ஆசிரியர்கள் இங்கு கல்வியியல் பயிற்சிக்காக வரவுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று ஆரோவில் வந்துள்ள மத்தியப் பிரதேச கல்வித்துறையினருடன் குஜராத் மாநில கூடுதல் முதன்மை செயலரும், ஆரோவில் அறக்கட்டளை செயலருமான ஜெயந்தி ரவி காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது, "ஸ்ரீ அரவிந்தர் மற்றும் அன்னை ஆகியோரின் தத்துவத்தில் வேரூன்றிய ஆரோவில்லின் ஒருங்கிணைந்த கல்வி மாதிரியை நாடு முழுவதும் பரப்புவது அவசியம். மத்தியப் பிரதேசத்துடன் ஆழமான மற்றும் நீடித்த ஒத்துழைப்பை ஏற்படுத்த ஆரோவில் தயாராகவுள்ளது. " என்றார்.
அதையடுத்து தேசிய கல்விக் கொள்கையுடன் இணைந்து, அனுபவ அடிப்படையிலான, வகுப்பறைக்கு வெளியேயான கற்றலை வலியுறுத்தும் ஆரோவில்லின் தனித்துவமான கல்வி முறை குறித்து பிரதிநிதிகள் விரிவான விவாதங்களில் ஈடுபட்டனர். இந்த உரையாடலில் மத்தியப் பிரதேச கல்வித்துறை கூடுதல் இயக்குநர் காம்னா ஆச்சார்யா, துணை இயக்குநர் பிரமோத் சிங் மற்றும் பல்வேறு கல்வித்துறை அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர்.
ஆரோவில் வருகை தொடர்பாக அவர்கள் தரப்பில் கூறுகையில், "மத்தியப் பிரதேசத்தில் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கான ஆரோவில் கல்விமுறை திட்டங்களை செயல்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஆரோவில் மூத்த பயிற்சியாளர்கள் ஆசிரியர்களுக்கு பயிற்றுவிப்பார்கள், பயிற்சி பெறுவோர் மாநிலம் முழுவதும் முழுமையான கற்பித்தல் முறைகளைப் பரப்புவார்கள்.
முதல் கட்டமாக கோடை விடுமுறையில் ஆரோவில்லுக்கு மத்தியப் பிரதேசத்தில் இருந்து நூறு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் கல்வியியல் பயிற்சி பெற அறக்கட்டளை தரப்பில் ஒப்புதல் தந்துள்ளனர். ஆரோவில் பள்ளிகளை பார்வையிட்ட பின்பு இம்முடிவு எடுக்கப்பட்டது. பாடத்திட்ட மேம்பாடு, உடற்கல்வி, ஆசிரியர் மேம்பாடு குறித்து எதிர்கால ஒத்துழைப்பையும் ஆராய்வோம்" என்றனர்.