ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு


பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மை தேர்வு முடிவுகளை என்டிஏ வெளியிட்டுள்ளது.

ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். ஜேஇஇ முதன்மை தேர்வு, பிரதான தேர்வு என இது 2 பிரிவாக நடைபெறும். இதில், முதன்மை தேர்வை ஆண்டுதோறும் 2 கட்டங்களாக தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்துகிறது. அதன்படி 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு ஜனவரி 22 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்பட்டது. 12.58 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் கடந்த பிப்ரவரி 11-ம் தேதி வெளியிடப்பட்டன.

இதைத் தொடர்ந்து, ஜேஇஇ 2-ம்கட்ட தேர்வு ஏப்ரல் 2 முதல் 9-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 531 மையங்களில் 9.92 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

இந்நிலையில், இந்த தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் மொத்தம் 10 பேர் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தில் எஸ்.பிரதீஷ் காந்தி என்ற மாணவர் அதிகபட்சமாக 99.99% மதிப்பெண் பெற்றுள்ளார்.

https://jeemain.nta.ac.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் முடிவுகளை அறிந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற தளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 011-40759000/ 69227700 என்ற தொலைபேசி எண் அல்லது jeemain@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த 2 தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற அதிக மதிப்பெண் அடுத்தகட்ட ஜேஇஇ பிரதான தேர்வுக்கு கணக்கில் கொள்ளப்படும். பிரதான தேர்வு மே 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு தகுதியானவர்கள் ஏப்ரல் 23-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது

x