அரசு பள்ளியில் 100% தேர்ச்சி - மாணவர்கள், ஆசியர்களை ஊட்டிக்கு சுற்றுலா அனுப்பிய எம்எல்ஏ


புதுச்சேரி கிராமப் பகுதியான பாகூர் தொகுதிக்குட்பட்ட கீழ்பரிக்கல்பட்டு அரசு பள்ளி மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்தனர்.

இதை அங்கீகரிக்கும் வகையில், அத்தொகுதி திமுக எம்எல்ஏ செந்தில் குமார் மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரையும் தனது சொந்த செலவில் ஊட்டிக்கு இரண்டு நாள் சுற்றுலா அனுப்பி வைத்தார். அவர்கள் அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர்.

இது பற்றி எம்எல்ஏ செந்தில் குமாரிடம் கேட்டதற்கு, “கீழ்பரிக்கல்பட்டு அரசுப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றிருந்தேன். அப்போது 10ம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடினேன். பொதுத் தேர்வுக்காக ஊக்குவித்து பேசும் போது, அவர்களின் ஆசையை கேட்டேன். 100 சதவீத தேர்ச்சி பெற்றால் சுற்றுலா‌ அழைத்து செல்ல ஏற்பாடு செய்து தருவதாக அப்போது உறுதி அளித்தேன். தற்போது, தேர்வு முடிவு வந்தவுடன், அவர்களை தொடர்பு கொண்டு கேட்டேன். அவர்கள் ஊட்டி செல்ல விரும்பியதால் அனுப்பி வைத்தேன்" என்று தெரிவித்தார்.

இது பற்றி சுற்றுலா சென்ற ஆசிரியர்களிடம் விசாரித்த போது, "எம்எல்ஏ அவது சொந்த செலவில் 28 மாணவர்கள் மற்றும் 6 ஆசிரியர்கள் என 34 பேர் கொண்ட குழுவை, தனி வாகனத்தில் அனுப்பி வைத்தார். இந்த சுற்றுலாப் பயணத்தின் போது மாணவர்கள் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், தொட்ட பெட்டா, படகு இல்லம், அரசு அருங்காட்சியகம், தேயிலை தொழிற்சாலை போன்ற முக்கிய சுற்றுலா தலங்களை பார்த்து மகிழ்ந்தனர். இது மாணவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை தந்தது” என்று தெரிவித்தனர்.

x