தேசிய சராசரியைவிட தமிழகத்தில் 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்களின் கல்வித்தரம் சிறப்பாக உள்ளதாக மாநிலக் திட்டக் குழு மற்றும் பள்ளிக்கல்வித் துறை இணைந்து நடத்திய கறறல் அடைவு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் சில தனியார் அமைப்புகள் நடத்திய ஆய்வில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கற்றல் நிலை பின்தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதை முன்வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவியும் கருத்து தெரிவித்ததால் விவகாரம் சர்ச்சையானது. இதையடுத்து பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை முழுமையாக ஆராய்வதற்காக ஏற்கெனவே நடத்திவரும் ஸ்லாஸ் தேர்வை மாநிலத் திட்டக்குழுவுடன் இணைந்து விரிவாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி மாநிலம் முழுவதும் 45,924 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் நடப்பாண்டு 3, 5, 8-ம் வகுப்பு பயிலும் 15.78 லட்சம் மாணவர்களில் 9 லட்சத்து 80,341 (66%) பேரிடம் ஸ்லாஸ் தேர்வு கடந்த பிப்.4 முதல் 6-ம் தேதி வரை நடத்தப்பட்டது.
இந்த ஆய்வு தரவுகளின்படி தயாரிக்கப்பட்ட மாநில அளவிலான கற்றல் அடைவுத்தேர்வு-2025 எனும் தொகுப்பறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், மாநிலத் திட்டக்குழுவின் செயல் துணைத்தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று சமர்பித்தார். இந்நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து ஜெயரஞ்சன் நிருபர்களிடம் கூறியதாவது: ஸ்லாஸ் தேர்வு வினாத்தாளில் 3-ம் வகுப்புக்கு 35 கேள்விகள், 5-ம் வகுப்புக்கு 45 வினாக்கள், 8-ம் வகுப்புக்கு 50 கேள்விகள் இடம்பெற்றன. தேர்வறை கண்காணிப்பாளர்களாக கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் 38,760 பேர் செயல்பட்டனர். அனைத்து பள்ளிகளிலும் 3, 5-ம் வகுப்புகளுக்கு தலா 20 மாணவர்களும் 8-ம் வகுப்பில் தலா 30 பேரிடமும் ஆய்வு நடத்தப்பட்டது.
அதன் முடிவுகளின்படி 3-ம் வகுப்பு மாணவர்கள் தமிழ் பாடத்தில் 67 சதவீதம், ஆங்கிலத்தில் 69 சதவீதம், கணிதத்தில் 54 சதவீதம், சூழ்நிலையியல் 76 சதவீதம் அடைவையும் 5-ம் வகுப்பு மாணவர்கள் தமிழ் பாடத்தில் 76 சதவீதம், ஆங்கிலத்தில் 51, சூழ்நிலையியல் மற்றும் கணிதத்தில் 57 சதவீதம் அடைவையும் பெற்றுள்ளனர். இதேபோல், 8-ம் வகுப்பு மாணவர்களை பொருத்தவரை தமிழில் 52, ஆங்கிலத்தில் 39, கணிதத்தில் 38, அறிவியல் 37, சமூக அறிவியல் பாடத்தில் 54 சதவீதம் அடைவு பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக 2021-ம் ஆண்டு மத்திய அரசின் நாஸ் ஆய்வுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தின் கற்றல் நிலை தேசிய சராசரியைவிட உயர்ந்துள்ளது.
குறிப்பாக எண்ணும் எழுத்தும் உட்பட சில திட்டங்களால் 3, 5-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவு நிலை சிறப்பான நிலையில் உள்ளது. அதேநேரம் 8-ம் வகுப்பு கணிதத்தில் மட்டும் மாணவர்கள் சற்று பின்தங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு கரோனா பரவலால் 2 ஆண்டுகள் ஏற்பட்ட கற்றல் இடைவெளி முக்கிய காரணமாக உள்ளது. இல்லம் தேடிக் கல்வி உள்ளிட்ட சில திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் அந்த இடைவெளியை முழுமையாக சரியாகவில்லை.
மாவட்டவாரியான தரநிலையில் அனைத்து வகுப்பு மற்றும் பாடங்களிலும் கன்னியாகுமரி முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து கடலூர், மதுரை, தென்காசி, சிவகங்கை அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. அதேபோல், கோவை, சென்னை, செங்கல்பட்டு, ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் தரவரிசையில் கடைசி இடங்களில் உள்ளன. தற்போதைய ஆய்வு முடிவுகள் அடிப்படையில் மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் செயல்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை முன்னெடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி உள்ளிடோர் கலந்துகொண்டனர்