திருச்சி மாவட்டம் துவாக்குடியில் ரூ.56.47 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள திருச்சி மாவட்ட அரசு மாதிரி பள்ளி மற்றும் மாணவ, மாணவிகள் விடுதிகள் ஆகியவற்றை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற் காக சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று பகல் 12 மணியளவில் திருச்சி விமான நிலையம் வந்தார்.
விமான நிலையத்தில் முதல்வரை, அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யா மொழி, மெய்ய நாதன், ரகுபதி, எஸ்.எஸ்.சிவசங்கர், மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, எம்.எம். அப்துல்லா, மக்களவை உறுப்பினர்கள் துரை வைகோ, முரசொலி, கே.என்.அருண் நேரு, ஆட்சியர் மா.பிரதீப்குமார், மாநகர காவல் ஆணையர் என்.காமினி, மாநராட்சி ஆணையர் வே.சரவணன் உள்ளிட்டோர் சிறப்பான முறையில் வரவேற்றனர்.
பின்னர், முதல்வர் அங்கிருந்து குண்டூர், அசூர் புறவழிச்சாலை, துவாக்குடி வழியாக துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்துக்கு சென்றார். அங்கு 9.7 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள திருச்சி மாவட்ட அரசு மாதிரி பள்ளிக் கட்டிடம் மற்றும் மாணவர், மாணவிகள் விடுதி வளாகம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முன்னதாக, பள்ளி வளாகத்தின் பின்புறம் உள்ள பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் அவர் திறந்துவைத்தார்.
தொடர்ந்து, அரசு மாதிரி பள்ளி வளாகத்தை சுற்றிப்பார்த்த முதல்வர், அங்கு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். அதன்பிறகு காரில் அரசு சுற்றுலா மாளிகைக்கு வந்து சேர்ந்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ரகுபதி, மெய்யநாதன், எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்கள், ஆட்சியர் மா.பிரதீப்குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், காடுவெட்டி தியாகராஜன், பழனியாண்டி, கதிரவன், இனிகோ இருதய ராஜ், அப்துல்சமது, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பி.சந்திரமோகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அரசு மாதிரி பள்ளியில் உள்கட்டமைப்பு வசதிகள்; திருச்சி மாவட்ட அரசு மாதிரி பள்ளி வளாகம் மட்டும் ரூ.19.65 கோடியில் 54,676 சதுரடி பரப்பளவில் தரைத்தளம், முதல் தளம் மற்றும் 2-ம் தளங்களில் மொத்தம் 22 டிஜிட்டல் திரையுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள். வேதியியல் ஆய்வகம், முழுவதும் குளிரூட்டப்பட்ட கணினி ஆய்வகம், நூலகம், பல் நோக்கு அறை, உயிரியல் ஆய்வகம், இயற்பியல் ஆய்வகம், முதலுதவி மற்றும் விளையாட்டு அறை, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அறைகள், அலுவலக அறை, ஓய்வறை, மாற்றுத் திறனாளிகளுக்கான அறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள், 50,000 லிட்டர் கொள்ளவு கொண்ட 2 தரைமட்ட தண்ணீர் தொட்டிகள். தடையற்ற மின்சாரம் வழங்க 5 கிலோவாட் திறன் கொண்ட 3 ஜெனரேட்டர்கள், தீயணைப்புக் கருவிகள், சிறிய பூங்கா போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
அதேபோல, தலா ரூ.18.57 கோடி செலவில் தரை தளம் மற்றும் நான்கு தளங்களுடன் கூடிய தலா 73,172 சதுர அடி பரப்பளவில் மாணவர்கள், மாணவிகளுக்கு தனித் தனி விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் லிப்ட் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.