வேடசந்தூர் அருகே விபத்தில் உயிரிழந்த மாணவன் பிளஸ் 2 தேர்வில் 443 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே ஒத்தையூரைச் சேர்ந்த பாலமுருகன்- அமராவதி தம்பதியின் மகன் சுகுமார் (17). திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து பொதுத்தேர்வு எழுதியிருந்தார். இவர், கடந்த ஏப்ரல் 6ம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்ற போது எதிரே வந்த ஆட்டோ மோதியதில் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 21ம் தேதி உயிரிழந்தார். நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இறந்த மாணவர் சுகுமார் 443 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார்.
பெற்றோர் கூறுகையில், ”விடுமுறை நாட்களில் தந்தையின் கரும்பு ஜூஸ் கடையில் பணிபுரிந்து வந்தான். எனது கல்லூரி படிப்புக்கு நானே சம்பாதித்து செலவை பார்த்துக்கொள்வேன். சிறு வயது முதலே கம்ப்யூட்டர் இன்ஜினீயர் ஆக வேண்டும் என்ற கனவை நனவாக்குவேன் என்று கூறிவந்தான். ஆனால், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான அன்று அவன் வாங்கிய மதிப்பெண்ணை காண அவன் உயிருடன் இல்லை. அவன் நினைத்ததை சாதிக்காமலேயே சென்றுவிட்டான்” என கண்ணீர் மல்கக் கூறினர்.