பிளஸ் 2 தேர்ச்சி விகிதம்: 18-ல் இருந்து 28-வது இடத்துக்குச் சென்ற செங்கல்பட்டு மாவட்டம்!


12ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற தலைமை ஆசிரியர்களை ஆட்சியர் அருண் ராஜ் நேரில் அழைத்து பாராட்டினார்.

செங்கல்பட்டு: தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 79 அரசு பள்ளிகள், 21 அரசு உதவி பெறும் சுயநிதி பள்ளிகள், 139 தனியார் பள்ளிகள் என மொத்தம் 239 பள்ளிகள் உள்ளன. மார்ச் 2025-இல் நடைபெற்ற பொதுத் தேர்வில் 27,744 மாணவர்கள் தேர்வு எழுதினர். அவர்களின் 26,160 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் சதவீதம் 94.29 ஆக உள்ளது.

மாநில அளவில் 28-வது இடத்தில் செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. அரசு பள்ளிகளில் 11,257 மாணாக்கர்கள் தேர்வு எழுதினர். அவர்களில் 10,020 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அனந்தமங்கலம், குன்னங்குளத்தூர் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகள், செங்கல்பட்டு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, பாலூர் மற்றும் மணமை ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி, குமிழி ஏகலைவா உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி ஆகிய 6 பள்ளிகளில் 100 சதவீதம் மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசு உதவி பெறும் 21 பள்ளிகளில் செங்கல்பட்டு புனித மரியன்னை பெண்கள் மேல்நிலை பள்ளி மட்டும் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது. 139 தனியார் பள்ளிகளில் 74 தனியார் பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றுள்ளது.

மாவட்ட அளவில் கீழ்கட்டளை ஹோலி ஃபேமிலி கான்வென்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி 597 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தில் உள்ளார். அரசுப் பள்ளியை பொறுத்தவரை திருக்கழுக்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த கோபிகா என்ற மாணவி 591 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.71-லிருந்து 94.29 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு 18-வது இடத்தில் இருந்த செங்கல்பட்டு மாவட்டம் தேர்ச்சி விகிதம் குறைவு காரணமாக 28-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே, 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ச.அருண் ராஜ், நேரில் அழைத்து வாழ்த்துகளை தெரிவித்தார். இதில், முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் உதய குமார் மற்றும் தலைமை ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

x