திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 91.49% மாணவர்கள் தேர்ச்சி


திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 91.49 சதவீத மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், திருவள்ளூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள 244 பள்ளிகளை சேர்ந்த 12,995 மாணவர்கள், 14,563 மாணவிகள் என, 27,558 பேர் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர். இதில், 11,550 மாணவர்களும்(88.88 சதவீதம்), 13,662 மாணவிகள் (93.81சதவீதம்) என, 25,212 பேர்(91.49 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும், மாவட்டத்தில் 102 அரசு பள்ளிகளில் பயின்ற 13, 252 மாணவ-மாணவியர்களில் 11,430பேர் (86.25 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த பிளஸ் 2 தேர்வு முடிவில், பூந்தமல்லி அரசு பார்வை குறைபாடுடைய மாணவர்களுக்கான பள்ளி உட்பட5 அரசு பள்ளிகள் உள்ளிட்ட 64 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் முதல் முறையாக கணினி மூலம் தேர்வு எழுதிய பார்வை திறன் குறைபாடுள்ள மாணவரான, பூந்தமல்லி பார்வைத் திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.ஆனந்த் 486 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியிலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றுள்ளார் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

x