விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் 95.11% - மாநில அளவில் 18-வது இடம்


விழுப்புரம் மாவட்ட பிளஸ் 2 தேர்வு முடிவுகளை ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் பெற்றுக்கொண்டார்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.11 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று (மே 8) வெளியானது. ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேர்வு முடிவுகளை ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்டார்.

பின்னர் அவர் கூறியது: “பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற்றது. 121 அரசு பள்ளிகள் உட்பட 192 பள்ளிகளைச் சேர்ந்த 10,533 மாணவர்களும், 11,048 மாணவிகளும் என மொத்தம் 21,581 மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்களில் 9,851 மாணவர்களும், 10,675 மாணவிகளும் என மொத்தம் 20,526 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் 93.53 சதவீத மாணவர்களும் மற்றும் 96.62 சதவீத மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 1,055 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.

9 இடங்கள் முன்னேற்றம்: மாவட்டத்தில் ஒட்டு மொத்த தேர்ச்சி சதவீதம் 95.11 ஆகும். இதன் மூலம் மாநில அளவில் 18-வது இடத்தை பிடித்துள்ளோம். கடந்தாண்டு, 27-வது இடத்தை பிடித்திருந்த நிலையில், 9 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளோம். மேலும் கடந்தாண்டு 93.17 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், 1.94 சதவீதம் கூடுதலாக பெற்றுள்ளோம். அரசு பள்ளிகள் அளவில் கடந்த கல்வியாண்டில் 91.30 சதவீதம் பெற்று 20 இடத்தில் இருந்தோம். இப்போது, 2.41 சதவீதம் கூடுதலாக பெற்று 93.71 சதவீதம் தேர்ச்சி பெற்று, 9 இடங்கள் முன்னேற்றம் அடைந்து 11-வது இடத்தை பிடித்துள்ளோம்.

87 பள்ளிகள் 100 சதவீதம்: விழுப்புரம் மாவட்டத்தில் 35 அரசுப் பள்ளி மற்றும் ஆதிதிராவிடர் பள்ளிகளும், 52 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 87 பள்ளிகள், நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை இணைந்து நடவடிக்கை எடுத்தது. தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றினர்.

அனைவருக்கும் பாராட்டுகள்: கற்பித்தல் பணி, காலை மற்றும் மாலை நேர சிறப்பு வகுப்புகள், வாராந்திர குறுந்தேர்வுகள், மெல்ல கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கற்றல் பயிற்சி, பள்ளிக்கு வராத மாணவர்களை கண்டறிந்து, அவர்களை வரவழைத்து பயிற்சி அளித்தல் போன்ற காரணங்கள்தான், தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க காரணமாகும். கடந்த 2 ஆண்டுகளாக தேர்ச்சி சதவீதம் அதிககரிக்க மாணவர்களின் கடின உழைப்பும், பெற்றோரின் முழு ஒத்துழைப்பும் முக்கிய காரணமாகும். அனைவருக்கும் எனது பாராட்டுகள்” என்றார்.

அப்போது முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட கல்வி அலுவலர்கள் சண்முகவேல்(தனியார் பள்ளி), சேகர்(விழுப்புரம்), சிவசுப்பிரமணி(திண்டிவனம்), ஆனந்தகிருஷ்ணன்(தொடக்கக் கல்வி), முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பெருமாள், செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

x