திருச்சி: துவாக்குடி அரசு பாலி டெக்னிக் கல்லூரி வளாகத்தில் அதி நவீன வசதிகளுடன், தனியார் பள்ளிகளை மிஞ்சும்விதமாக அரசு மாதிரி பள்ளி கட்டப்பட்டுள்ளது. இப்பள்ளியை நாளை (மே 8) தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டப் பேரவை தொகுதிக்குட்பட்ட துவாக்குடியில், மாவட்ட அரசு மாதிரி பள்ளியும், மாணவர், மாணவிகள் விடுதியும் 7.9 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் தொகுதியில் அமைந்துள்ள இந்த மாதிரி பள்ளி, தனியார் பள்ளிகளை மிஞ்சும்விதமாக பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மாதிரி பள்ளி ரூ.19.65 கோடி மதிப்பில் 54,676 சதுர அடியில் 2 தளங்களுடன் 22 வகுப்பறைகளை கொண்டுள்ளது. முழுவதும் குளிரூட்டப்பட்ட கணினி ஆய்வகம், அறிவியல் ஆய்வகங்கள், நூலகம், கலை, கைவினைக் கலை அரங்கம், விளையாட்டரங்கம், ஒவ்வொரு தளத்திலும் கழிப்பறைகள் அமைக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு தளத்திலும் சுத்திகரிக்கப்பட்ட குளிர்ந்த, சாதாரண, வெந்நீர் வசதி செய்யப் பட்டுள்ளது.
அனைத்து வகுப்பறைகளுக்கும் ஸ்மார்ட் போர்டு, ஒலி பெருக்கி வசதி செய்யப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர் அறை, நிர்வாக அலுவலக அறை, ஆசிரியர்கள் ஓய்வறை, பொருட்கள் வைப்பறை ஆகியவையும் உண்டு. மாடிக்கு செல்ல படிக்கட்டுகளுடன், சாய்தள நடைபாதை வசதியும் செய்யப்பட்டுள்ளது. மாணவர், மாணவிகளுக்கு தனித்தனியாக நான்கு தளங்களுடன் விடுதி கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு வளாகமும் தலா 73,172 சதுர அடி பரப்பளவில் தலா ரூ.18.90 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.
பள்ளியின் முகப்பில் திருவள்ளுவர் சிலையுடன் சிறிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 2024 பிப்.24 அன்று அடிக்கல் நாட்டப்பட்ட இக்கட்டிடம், 15 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாராகி யுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாதிரிப்பள்ளி, விடுதி, திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் நாளை(மே 8)காலை திறந்து வைக்கிறார்.
மாணவர் சேர்க்கை, செயல்பாடு எப்படி ?: தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களை மேம்படுத்தும்விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அரசு மாதிரிப் பள்ளியை தமிழக அரசு அமைத்து வருகிறது. இதில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெறுகிறது. முழுக்க உண்டு உறைவிடப் பள்ளியாக செயல்படும் அரசு மாதிரி பள்ளிகளில், ஒவ்வொரு பாடத்திலும் புலமைமிக்க சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது.
9 அல்லது 11ம் வகுப்புகளில் மட்டுமே மாணவர் சேர்க்கை உண்டு. முழுவதும் அரசு பள்ளிகளில் கல்வி பயின்றி மாணவர்கள் மட்டுமே இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள். இங்கு படித்து 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர் கல்விக்கான கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களை யும் அரசே ஏற்றுக் கொள்கிறது.