‘எல்லாம் டிஜிட்டல் மயம்’ - மாதிரி பள்ளியாக மாறும் மதுரை மாநகராட்சி இளங்கோ பள்ளி!


படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: மாநகராட்சி இளங்கோ பள்ளி, வரும் கல்வி ஆண்டு முதல் டிஜிட்டல் நூலகம், டிஜிட்டல் ஆய்வகம் உள்பட அனைத்து வசதிகளுடன் கூடிய 'மாதிரி பள்ளி'யாக உருவாகிறது. மாநகராட்சி ஆணையர் சித்ரா, இதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்து தமிழக அரசு ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளார்.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவியர் கல்வி, நுண்கலை மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்க, உலக தரத்திலான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, 'மாதிரி பள்ளி' அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மதுரை மாநகராட்சி சார்பில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உட்பட 64 பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இதில், பனகல் சாலையில் உள்ள மாநகராட்சி இளங்கோ பள்ளியை ‘மாதிரி பள்ளி’ ஆக மாற்ற மாநகராட்சி ஆணையர் சித்ரா, திட்ட ஒப்புதல் அறிக்கை அனுப்பி உள்ளார். வரும் கல்வி ஆண்டு முதல் இந்த பள்ளியை ‘மாதிரி பள்ளி’ ஆக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இது குறித்து மாநகராட்சி கல்வி அதிகாரிகள் கூறியதாவது: மதுரை ஒத்தக்கடையில் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை வகுப்புகள் உள்ளன. இந்த பள்ளியை விட டிஜிட்டல் மயமாகவும், பிரம்மாண்ட கல்வி வசதிகளுடன் மாநகராட்சி இளங்கோவன் மேல்நிலைப்பள்ளி மாதிரி பள்ளியாக மாற்றப்பட உள்ளது. ஏற்கெனவே இந்த பள்ளியில் ‘ஸ்மார்ட் கிளாஸ்’ வகுப்பு இருந்தாலும், அனைத்து வகுப்புகளுக்கும் இல்லை. தற்போது இப்பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரை மட்டுமே வகுப்புகள் உள்ளன.

மாதிரி பள்ளியாக மாற்றும்போது, ப்ரீகேஜி முதல் பிளஸ் 2 வரை வகுப்புகள் அமையும். அரசு பள்ளிகளை பொறுத்தவரையில் தொடக்க, நடுநிலை, மேல்நிலைப் பள்ளிகள் தனித்தனியாக இருக்கும். ஆனால், இந்த மாதிரி பள்ளியில் ப்ரீகேஜி முதல் பிளஸ் 2 வரை ஒரே இடத்தில் மாணவர்கள் படிக்கலாம். அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே தலைமை ஆசிரியர் பணியமர்த்தப்பட உள்ளார்.

இப்பள்ளியின் அனைத்து வகுப்புகளுமே ‘ஏசி’ வசதியுடன் கூடிய ‘ஸ்மாட் கிளாஸ்’ வகுப்பறைகளாக அமைய உள்ளன. நவீன ஆய்வகங்கள் அமைக்கப்படும். ஏற்கெனவே இந்த பள்ளி கட்டிடம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. ஆனால், ப்ரீகேஜி முதல் 5-ம் வகுப்பு வரை வகுப்புகளுக்கு கட்டிட வசதியில்லை. அதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி மேற்கொள்ள உள்ளது.

இங்கு டிஜிட்டல் நூலகம், டிஜிட்டல் ஆய்வகம், உபகரணங்களுடன் விளையாடுமிடம், இன்னோவேஷன் கவுன்சில் ஆகியவை உருவாக்கப்படும். இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காக உள்ளூர் தொழிற்துறையுடன் இணைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

பொதுவாக மாதிரி பள்ளி அமையும்போது தமிழக அரசு, அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கும். ஆனால், ஒப்புதல் மட்டுமே வழங்கும் படியும், சிஎஸ்ஆர் மற்றும் மாநகராட்சி பொது நிதியை பயன்படுத்தி இந்த மாதிரி பள்ளியை அமைத்துக் கொள்கிறோம் என்று திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் மட்டும் வழங்கும் படியும் தமிழக அரசை மதுரை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்ட இந்த மே மாதத்தில் இந்த மாதிரி பள்ளி பணிகளை முடிக்க ஆணையர் சித்ரா நடவடிக்கை எடுத்து வருகிறார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு 2 புதிய பேருந்துகளை வாங்க திட்டம்: மாநகராட்சி பள்ளிகளுக் கென்று இதுவரை சொந்தமாக பள்ளி வாகனங்கள், பேருந்துகள் இல்லை. மாணவர்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அழைத்துச் செல்ல ஆசிரியர்கள் வாடகைக்குத் தான் வாகனங்களை பிடித்து அழைத்து செல்ல வேண்டி உள்ளது. அதற்கு ஆசிரியர்கள் மிகுந்த சிரமப் படுகிறார்கள்.

மாணவர்களை கண்காட்சிகளுக்கும், பசுமை நடைப் பயணத்துக்கும், சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கும், நூலங்களுக்கும், ஆய்வகங்களுக்கும் அழைத்து செல்ல சொந்தமாக 2 புதிய பேருந்துகளை வாங்க மாநகராட்சி ஆணையர் சித்ரா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இந்த பேருந்து களை மாநகராட்சி பள்ளிகள் பயன்படுத்தி கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

x