வேலூர்: மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிக்கு நூதன முறையில் கஞ்சா சப்ளை செய்ய முயன்ற நண்பர்கள் இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
வேலூர் வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு (22). இவர், வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் கடந்தாண்டு அடைக்கப்பட்டார். அவரைப் பார்க்க நண்பர்களான வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்த மோகன் (24), பாகாயத்தை சேர்ந்த ஹரிஷ் (22) ஆகியோர் நேற்று முன்தினம் பிற்பகல் சிறைக்கு சென்றுள்ளனர். சிறைக்காவலர்கள் சோதனைக்கு பிறகு இருவரும் பார்வையாளர்கள் அறைக்கு அனுப்பப் பட்டனர். அங்கு விஷ்ணுவுடன் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். திடீரென நூதன முறையில் வாயில் பதுக்கி வைத்திருந்த ஒரு கிராம் அளவுக்கு சிறிய கஞ்சா பொட்டலத்தை இரும்பு கம்பிகளுக்கு மறுபக்கம் இருந்த விஷ்ணுவிடம் துப்பியுள்ளனர்.
அந்த பொட்டலத்தை விஷ்ணு எடுத்து மறைக்க முயன்றபோது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஒருவர் கவனித்துள்ளார். உடனடியாக, விஷ்ணு அந்த கஞ்சா பொட்டலத்தை தூக்கி எறிய முயன்றுள்ளார். அதை சிறைக்காவலர் கையும், களவுமாக பிடித்தனர். தொடர்ந்து, ஹரிஷ் மற்றும் மோகன் ஆகியோரை சிறைக் காவலர்கள் பிடித்து பாகாயம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை கைதி விஷ்ணு மற்றும் அவரது நண்பர்களான ஹரிஷ், மோகன் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்ததுடன், ஹரிஷ், மோகன் ஆகிய இருவரையும் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.