உட்கட்சி பிரச்சினையால் முதல்வர் படத்தை உடைத்து ரகளை: குமாரபாளையம் திமுகவினர் 4 பேர் கைது


சேலம்: உட்கட்சி பிரச்சினை காரணமாக முதல்வர் படத்தை உடைத்த திமுகவைச் சேர்ந்த 4 பேரை குமாரபாளையம் காவல் துறையினர் கைது செய்தனர்.

குமாரபாளையம் நகர 14-வது வார்டு திமுக செயலாளர் விஸ்வநாதன். இவருக்கும் நகர திமுகவைச் சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இச்சூழலில் நேற்று முன்தினம் விஸ்வநாதன் அலுவலகத்தில் இருந்த தமிழக முதல்வர் படத்தை சிலர் கீழே தள்ளி அதனை உடைத்து, காலால் உதைத்துள்ளனர்.

அந்தக் காட்சிகளை சிலர் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். இது குமாரபாளையம் நகர திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக நகராட்சித் தலைவர் விஜயகண்ணன் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதன்பேரில் திமுகவைச் சேர்ந்த விஸ்வநாதன் (59), பிரபாகரன் (33), நாகராஜ் (28), அலெக்சாண்டர் (30) ஆகிய 4 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உட்கட்சி பிரச்சினையில் முதல்வர் படத்தை திமுகவினர் உடைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x