கள்ளக்குறிச்சி: திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). இவர் சங்கராபுரம் அருகே உள்ள அரியலூர் துணை மின் நிலையத்தில் இளநிலை மின்வாரிய பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் வருகிற 30ம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையில், தன் பணப் பலன்கள் உள்ளிட்டவற்றை பெற மின்வாரிய தலைமை அலுவலகத்தில் கோப்புகளை அனுப்புவதற்காக கள்ளக்குறிச்சி மேற்பார்வை பொறியாளர் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றார். அங்கு நிர்வாகப் பிரிவில் பணியாற்றும் கடலூர் மாளிகைமேடு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (50, தற்போது கள்ளக்குறிச்சி அஜீஸ் நகரில் குடியிருந்து வருகிறார்) ராஜேந்திரனிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
இதையடுத்து ராஜேந்திரன் கள்ளக்குறிச்சி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் அறிவுறுத்தல்படி நேற்று செந்தில் குமாரிடம், ராஜேந்திரன் பணத்தை கொடுத்தார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.