கடலூர்: சென்னையில் இருந்து மன்னார்குடி செல்லும் தனியார் சொகுசு பேருந்து ஒன்று நேற்று அதிகாலை சுமார் 2 மணிக்கு கடலூர் ஆல்பேட்டை சோதனைச் சாவடி பகுதிக்கு வந்தது. சோதனைச் சாவடியில் பணியில் இருந்த தலைமைக் காவலர் தேவேந்திரன், ஆயுதப் படை காவலர் அசோக் குமார் ஆகியோர் அந்த சொகுசு பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் எந்த ஆவணங்களும் இன்றி ரூ.40 லட்சம் இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அந்த பணத்தை எடுத்துக் கொண்டு பயணம் செய்த சென்னை எல்லீஸ்ரோடு பகுதியைச் சேர்ந்த முகமது மிதார் மகன் நவீத் அன்வர் (26) என்பவரை காவலர்கள் பிடித்து கடலூர் புதுநகர் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு நவீத் அன்வரிடம் காவலர்கள், ஹவாலா பணமாக என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து வருமான வரித் துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.