சென்னை: மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் துறைமுகத்தில் கன்டெய்னரில் இருந்த ரூ.9 கோடி மதிப்பிலான வெள்ளிக் கட்டிகள் மாயமான வழக்கில், ஏற்கெனவே 12 பேர் கைதான நிலையில், மேலும் இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே மண்ணூரில் செயல்படும் தனியார் நிறுவனத்துக்கு லண்டனிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட வெள்ளிக் கட்டிகளில் ரூ.9 கோடி மதிப்பிலான 922 கிலோ எடை கொண்ட 30 வெள்ளி பார்கள் மாயமானதாக போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து, காட்டூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையின் அடிப்படையில், தனியார் துறைமுகத்தின் ஒப்பந்த ஊழியர்கள் 12 பேரை ஏற்கெனவே தனிப்படை போலீஸார் கைது செய்தனர். கைதான 12 பேரிடம் இருந்து 738.49 கிலோ எடையுள்ள 24 வெள்ளிக் கட்டிகள், லாரி, கார் மற்றும் மொபைல் போன் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் தண்டையார்பேட்டை மற்றும் எருக்கஞ்சேரியை சேர்ந்த கவியரசன் (40), ஜெய்னுலாவுதீன் (55) ஆகிய இருவரை நேற்று போலீஸார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து 92 கிலோ எடையுள்ள 3 வெள்ளி கட்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.