மதுரை: திருப்பரங்குன்றம் அருகே பட்டா மாற்றுவதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம் அருகிலுள்ள வலையங்குளத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி லாவண்யா தேவி பெயரில் 10.63 சென்ட் இடம் உள்ளது. இதற்கான பட்டா மாறுதலுக்காக வலையங்குளம் நில அளவையர் (பிர்கா சர்வேயர்) ராமராஜ் (எ) அன்புராஜிடம் (35) லாவண்யா தேவி மனு அளித்தார். பட்டா மாறுதல் செய்ய ராமராஜ் சுரேஷிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சுரேஷ் மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீஸார் கூறியபடி, நேற்று காலை சுரேஷ் ரசாயனம் கலந்த ரூ.5 ஆயிரம் பணத்தை சர்வேயர் ராமராஜிடம் அவரது அலுவலகத்தில் வைத்து கொடுத்தார். அருகில் மறைந்து இருந்த டிஎஸ்பி சத்யசீலன் தலைமையில் ஆய்வாளர் குமரகுரு உள்ளிட்ட போலீஸார் கையும், களவுமாக பிடித்து ராமராஜை கைது செய்தனர்.