ராமேசுவரம்: மனநலம் பாதித்த தங்கையிடம் தவறாக நடக்க முயன்ற நண்பனை கொன்று புதைத்தவர் கைது


கொலை செய்யப்பட்ட நம்புராஜன்

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட தங்கையிடம் தவறாக நடக்க முயன்ற நண்பனை கொன்று வீட்டின் பின்புறம் புதைத்தவரை போலீஸார் கைது செய்தனர்.

ராமேசுவரம் பெரிய பள்ளிவாசல் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி நம்புராஜன் (47). இவர் கடந்த மார்ச் 30ம் தேதியன்று, நண்பர்களை பார்க்க செல்வதாக கூறிச் சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது சகோதரி ராணி ராமேசுவரம் துறைமுகம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீஸார் விசாரணையில், நம்புராஜனுக்கு ராமேசுவரம் வெண்மணி நகரைச் சேர்ந்த மீனவரான வெங்கட் சுப்பிரமணியன் (47) என்பவருடன் சேர்ந்து அடிக்கடி மது அருந்தும் பழக்கம் இருப்பது தெரியவந்தது. இதற்காக நம்புராஜன், வெங்கட் சுப்பிரமணியன் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

இதனையடுத்து, வெங்கட சுப்பிரமணியனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மூன்று வாரங்களுக்கு முன்பு வெங்கட் சுப்பிரமணியன் வீட்டில் இல்லாத போது அவர் வீட்டிற்கு வந்த நம்புராஜன், வெங்கட் சுப்பிரமணியனின் வீட்டிலிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட தங்கையிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கட் சுப்பிரமணியன் நம்புராஜனை அடித்ததில் அவர் உயிரிழந்ததாகவும், வெங்கடசுப்பிரமணியன் நம்புராஜின் உடலை வீட்டிற்கு பின்புறம் உள்ள காலி இடத்தில் தோண்டி புதைத்ததாக போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, வெங்கட் சுப்பிரமணியனை போலீஸார் கைது செய்தனர்.

இன்று (ஏப்.24) பிற்பகல், வெண்மணி நகரில் உள்ள வீட்டிற்கு சென்ற போலீஸார், கொலை நடைபெற்ற இடத்தையும், பின்னர் மோப்ப நாய் உதவியுடன் புதைக்கப்பட்ட இடத்தையும் ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்தனர்.

மேலும், வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு உடலைத் தோண்டி எடுப்பதற்கு அறிவுறுத்தினர். மாலை நேரத்தில் முறையான பிரேத பரிசோதனை செய்ய இயலாது, என மருத்துவர்கள் சார்பில் காவல்துறைக்கு தெரிக்கப்பட்டதால் நாளை காலையில் புதைக்கப்பட்ட நம்புராஜனின் உடலை அதிகாரிகள் தோண்டி எடுக்க உள்ளனர்.

x