சென்னை: ஆதம்பாக்கம் பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்திய நபர் கைது செய்யப்பட்டார், ஒரு பெண் மீட்கப்பட்டார்.
இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘சென்னை பெருநகர காவல், விபச்சார தடுப்புப் பிரிவு-2 (Immoral Traffic Prevention Unit-2) காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தனிப்படையினர் நேற்று மதியம், ஆதம்பாக்கம், V.V.காலனி தெருவில் உள்ள ஒரு வீட்டை ரகசியமாக கண்காணித்தபோது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.
அதன்பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட தனிப்படையினர் மேற்படி வீட்டில் சோதனைகள் மேற்கொண்டு, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த சம்சுதீன் என்பவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மேற்படி இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு தங்க வைத்திருந்த ஒரு பெண் மீட்கப்பட்டார்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட சம்சுதீன் மேற்படி வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்தியதும், இவர் மீது ஏற்கனவே பாலியல் தொழில் நடத்திய குற்றத்திற்காக 2 வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட சம்சுதீன் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட பெண் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.