திருச்சி டாஸ்மாக் கடையில் இரு தரப்பினர் மோதல்: இரும்பு வியாபாரி கொலை


திருச்சி: காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் பழக்கடை வியாபாரி சரவணன் (44). இவர், நேற்று தேவதானம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அவருக்கு எதிரே, தமிழக மக்கள் முன்னேற்றக்கழக மலைக்கோட்டை பகுதி செயலாளரும், என்எஸ்பி சாலையில் தள்ளுவண்டியில் பழச்சாறு கடை நடத்தி வருபவருமான சுப்பிரமணியன் (44) மற்றும் அவரது நண்பர்களான பனையக் குறிச்சியைச் சேர்ந்த நாகராஜ், ராஜூ ஆகியோர் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், சரவணனுக்கும், சுப்பிரமணியனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, சரவணன் தனது உறவினரான தாரா நல்லூர், கீரைக்கடை பஜாரில் பழைய இரும்பு கடை நடத்தி வரும் சஞ்சீவிநகர் பொன்மணி நகரைச் சேர்ந்த கருக்கு வேல் ராஜ் (44) என்பவரை அழைத்து ள்ளார். கருக்கு வேல் ராஜ் அங்கு வந்து தட்டிக்கேட்டபோது, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. இதனால், பார் ஊழியர்கள் அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.

வெளியே சென்ற பிறகும் இருதரப்பினரும் மோதிக் கொண்டனர். அப்போது, சுப்பிரமணியன் பீர் பாட்டிலால் குத்தியதில் கருக்குவேல்ராஜ் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அங்கிருந்தவர்கள்கருக்குவேல் ராஜை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவலறிந்த திருச்சி மாநகர வடக்கு காவல் துணை ஆணையர் சிபின், கோட்டை உதவி ஆணையர் ஆரோக்கிய ராஜ், ஆய்வாளர் விஜய பாஸ்கர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இந்த மோதலுக்கு பின்னணியில் இருதரப்புக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இந்த மோதலில் காயமடைந்த சரவணன், சுப்பிரமணியன், நாகராஜ் ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். ராஜூ போலீஸ் காவலில் உள்ளார். இது குறித்து கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

x