தஞ்சாவூர்: திருவிடைமருதூர் வட்டம், திருமங்கலக்குடி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் வீரப்பிள்ளை (44) இவருக்கு கடந்தாண்டு திருவள்ளூர் மாவட்டம் மணவாளன் நகரைச் சேர்ந்த பெரியகருப்பன் மகன் சிவக்குமார் (49), இவரது தங்கையும், தஞ்சாவூர் அசோக் நகர் 10-வது தெருவைச் சேர்ந்தவருமான பரமேஸ்வரி (45) ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர்.
பின்னர், 3 பேரும் சேர்ந்து வீடு கட்டுமான பொருட்கள் விற்பனை தொழில் செய்யலாம் எனக் கூறி வீரப்பிள்ளையிடம் ரூ.59.90 லட்சத்தை சிவக் குமாரும், பரமேஸ்வரியும் வாங்கியுள்ளனர். ஆனால், தொழில் தொடங்காமல் காலம் தாழ்த்தியதுடன், பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர்.
இது குறித்து வீரப்பிள்ளை அளித்த புகாரின் பேரில் தமிழ்ப் பல்கலைக் கழக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, சிவக்குமார், பரமேஸ்வரி ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.