60 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை


ஸ்ரீவில்லிபுத்தூர்: மூதாட்டிக்கு பாலியல் தொல்லை அளித்து கொலை செய்ய முயன்ற ஆட்டோ ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாபட்டியைச் சேர்ந்த முத்தையா மகன் மணிகண்டன்(31). திருமணமானவர். இவர் கூமாபட்டியில் ஆட்டோ ஓட்டி வந்தார். மணிகண்டன் 2022-ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி வீட்டில் தனியாக இருந்த 60 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். அப்போது உடன்பட மறுத்த மூதாட்டியின் கழுத்தை சேலையால் இறுக்கி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

இது குறித்து மூதாட்டி அளித்த புகாரின்பேரில் கூமாபட்டி போலீஸார் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மணிகண்டனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.14 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜான்சி ஆஜரானார்.

x