வீட்டு கதவில் மின்சாரம் பாய்ச்சி மனைவியை கொல்ல முயற்சி: காட்பாடி அருகே அதிர்ச்சி


காட்பாடி அருகே வீட்டுக்கதவில் மின்சாரம் பாய்ச்சி மனைவியை கொலை செய்ய முயன்ற தொழிலாளியை காவல் துறையினர் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த எல்.ஜி.புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (48). இவர், ஆழ்துளை கிணறு மோட்டார்களை பழுது பார்க்கும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அன்பழகி (45). இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த முருகன் கடந்த திங்கள் கிழமை இரவு தனது வீட்டின் கதவை மின்வயரால் இணைத்துள்ளார். பின்னர், தண்ணீரை எடுத்து வீட்டுக்குள் ஊற்றியுள்ளார்.

சிறிது நேரம் கழித்து அன்பழகி கதவைத் திறக்க முயன்றபோது அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் விரைந்து சென்று மின் இணைப்பை துண்டித்து விட்டு அன்பழகியை மீட்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து, விருதம்பட்டு காவல் நிலையத்தில் அன்பழகி அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.

x