விழுப்புரம்: நரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜூ. கட்டிடத் தொழிலாளியான இவரின் வீட்டுமனையை முறைப்படி அளக்க வேண்டி விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
இந்த விண்ணப்பம் வளவனூர் சுற்றுக்குழு நில அளவையர் ஸ்டாலின் (27) என்பவரிடம் விசாரணைக்கு வந்தது. ராஜூவின் நெருங்கிய உறவினரான குமாரகுப்பத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் இதற்காக ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார். நில அளவைக்கு ரூ 3 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இந்த விஷயம் தொடர்பாக குமாரகுப்பம் கிராம உதவியாளர் கிருஷ்ணன் (57) என்பவரை சந்திக்க, அவரும் ரூ. 3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத ஏழுமலை இது குறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட டிஎஸ்பி அழகேசன், ஏழுமலையிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து லஞ்சம் கேட்டவர்களிடம் கொடுக்குமாறு தெரிவித்தார்.
அதன்படி நேற்று பிற்பகல் குமாரகுப்பம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நில அளவையர் ஸ்டாலின் முன்னிலையில் கிராம உதவியாளர் கிருஷ்ணனிடம் ஏழுமலை லஞ்ச பணத்தை கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி அழகேசன் தலைமையிலான போலீஸார் இருவரையும் பிடித்து, விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி, அவர்களை கைது செய்தனர்.