தேனி: கூடலூர் கே.கே.நகரை சேர்ந்த வழக்கறிஞர் பாண்டியராஜன். இவரது மனைவி அம்பிகா (43) கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். நேற்று கம்பம் அரசமரம் பூக்கடை அருகே நின்று கொண்டிருந்த அம்பிகாவை, அங்கு வந்த 55 வயதுடைய நபர் கீழே தள்ளிவிட்டு தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்ட முயன்றார்.
இதனை அம்பிகா தடுக்க முயன்றபோது அவரது இடது கண்ணுக்கு கீழ் காயம் ஏற்பட்டது. அவரை கம்பம போலீஸார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விசாரணையில், அம்பிகாவை அரிவாளால் வெட்டியவர் கூடலூரைச் சேர்ந்த குபேந்திரன் என தெரிய வந்தது.
குபேந்திரனுக்கும், அம்பிகா குடும்பத்தினருக்கும் பாதை பிரச்சினை இருந்துள்ளது. இந்த முன்விரோதத்தில் அரிவாளால் வெட்டியுள்ளார் என தெரிய வந்தது. குபேந்திரனை போலீஸார் கைது செய்தனர்.