சரக்கு வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதி 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு @ நாமக்கல்


உயிரிழந்த கல்லூரி மாணவர்கள்

நாமக்கல்: திருச்செங்கோடு அருகே சரக்கு வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தைச் சேர்ந்தவர் பாலாஜி (19), வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தர் திருப்பதி (19). இருவரும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிசிஏ 2-ம் ஆண்டு படித்து வந்தனர். இன்று செமஸ்டர் தேர்வு எழுதிய இருவரும் கரூருக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். வாகனத்தை மாணவர் திருப்பதி ஓட்டிச் சென்றுள்ளார்.

திருச்செங்கோடு அருகே சித்தாளந்தூர் என்ற இடத்தில் சென்றபோது எதிரில் வந்த வந்த சரக்கு வாகனத்தின் பக்கவாட்டில் எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகனம் மோதியுள்ளது.இதில் தூக்கி வீசப்பட்ட மாணவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனிடையே விபத்த ஏற்படுத்திய சரக்கு வாகனம் நிற்காமல் சிறிது தூரம் சென்றுள்ளது. அங்கிருந்தவர்கள் வாகனத்தை விரட்டிப்பிடித்தனர். தொடர்ந்து சரக்கு வாகன ஓட்டுநரான திருச்செங்கோடு அருகே தேவனாங்குறிச்சியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். சம்பவம் தொடர்பாக திருச்செங்கோடு ஊரக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x