போலீஸ் என மிரட்டி அழகு நிலைய பெண்களிடம் நகை, ரூ.40,000 பறிப்பு: நாமக்கல்லில் 6 இளைஞர்கள் கைது


நாமக்கல்: போலீஸ் என கூறி அழகு நிலைய பெண்களை மிரட்டி நகை மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறித்துச் சென்ற 6 பேரை நாமக்கல் காவல் துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் மல்லூரைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் நாமக்கல் - திருச்சி சாலை எஸ்கே நகர் அருகே தனியார் வாடகை கட்டிடம் ஒன்றில் ஆயுர்வேத சிகிச்சை மையம் மற்றும் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இந்த மையத்திற்கு கடந்த 18-ம் தேதி மாலை 3.30 மணிக்கு கார் மற்றும் இரு சக்கர வாகனத்தில் 8 இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்கள் தங்களை போலீஸார் என அறிமுகப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து அங்கிருந்த பெண் பணியாளர்களை மிரட்டி அவர்கள் அணிந்திருந்த ஒன்னே முக்கால் பவுன் நகை, சிகிச்சை மையத்தில் இருந்த ரூ.40 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் மொபைல் போன், சிசிடிவி கேமிரா பதிவுகள் கொண்ட ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை பறித்துள்ளனர். பின் அனைவரும் அங்கிருந்து தப்பி தலைமறைவாகினர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக நாமக்கல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மேலும், மாவட்ட போலீஸ் எஸ்பி ராஜேஸ் கண்ணன் உத்திரவின்பேரில் ஏஎஸ்பி ஆகாஷ் ஜோஷி மற்றும் ஆய்வாளர் கபிலன் ஆகியோர் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப்படை காவலர்கள் அந்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். மேலும், அருகே உள்ள கட்டிடத்தில் இருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் முகங்கள், கார் மற்றும் இரு சக்கர வாகன எண்கள் ஆகியவை தெளிவாக பதிவாகியிருந்தது.

இதையடுத்து அந்த வாகன எண்களைக் கொண்டு விசாரணை நடத்தியதில், அவர்களில் 4 பேர் கரூர் மாவட்டத்தையும், 2 பேர் பரமத்தி வேலூர் மற்றும் 2 பேர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தை சேர்ந்த விமல் பஷீர்(27), ராஜசேகரன்(25), தாந்தோணிமலை யுவராஜ்(24), புகளூர் செல்வமாணிக்கம்(27), நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே செங்கப்பள்ளி கார்த்திகேயன்(25), சந்துரு(24) ஆகிய 6 பேரையும் போலீஸார் இன்று கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.16,000 ரொக்கம், ஒரு மொபைல் போன், ஒன்னே முக்கால் பவுன் நகை மற்றும் ஒரு கார், இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து கைது செய்யப்பட்ட 6 பேரும் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இருவரை தனிப்படை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

x