தூத்துக்குடியில் போலீஸ் விசாரணையின் போது தொழிலாளி தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்தவர் ஆனந்த சைரஸ். கூலி தொழிலாளியான இவருக்கும், இவரது வீடு அருகே வசித்து வரும் கருப்பசாமி என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரவில் ஆனந்த சைரஸ் மதுபோதையில் பேசிக் கொண்டிருந்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கருப்பசாமி சிப்காட் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து சிப்காட் காவல் நிலைய போலீஸார் 3 பேர் ஆனந்த சைரஸ் வீட்டுக்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து வந்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால் பதற்றமடைந்த போலீஸார் தீயை அணைத்தனர். உடல் கருகிய ஆனந்த சைரஸ் ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ஆனந்த சைரஸின் மனைவி சரோபினா கூறும்போது, எ‘‘னது கணவர் எந்த தவறும் செய்யவில்லை. குடிபோதையில் புலம்பிக் கொண்டு இருந்தார். பக்கத்து வீட்டுக்காரர் கருப்பசாமி என்பவர் தன்னைத்தான் அவர் பேசுவதாக கூறி போலீஸில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி விசாரிக்க வந்த போலீஸார் எந்த தவறும் செய்யாத, எனது கணவரை தாக்கினர்.
இதனால் மனமுடைந்த அவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். எனது கணவர் வருமானத்தை வைத்து தான் குடும்பம் நடந்து வருகிறது. எனது வாழ்வாதாரத்துக்கு அரசு உதவி வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.