திருச்செந்தூரில் இரு தரப்பினர் பயங்கர மோதல் - 5 பேருக்கு வெட்டு!


திருச்செந்தூரில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்த 13 பேரை பிடித்து தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கோகுல் நகரைச் சேர்ந்தவர் கண்ணன், சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும் வேலை செய்கிறார். இவர், கடந்த 20ம் தேதி சோனகன்விளை நீல்புரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது, அதே ஊரை சேர்ந்த ஜெபராஜ் என்ற கற்கண்டு (60) என்பவரது காரில் மோட்டார் சைக்கிள் உரசியது.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் கண்ணன் தாக்கப்பட்டார். தாக்கப்பட்டது தொடர்பாக கண்ணன் தனது நண்பர்களிட ம் கூறியுள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் கண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் நீல்புரத்துக்கு சென்று ஜெபராஜிடம் தட்டிக் கேட்டனர். அரிவாளால் வெட்டியதில் ஜெபராஜ் பலத்த காயமடைந்தார்.

இதற்கிடையே ஜெபராஜின் மகன் நவீன் (32) திருச்செந்தூருக்கு வந்து தனது தந்தை தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நண்பர்களிடம் தெரிவிக்கவே அவர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் எதிர் தரப்பினரை தேடி சென்றனர். இரு தரப்பினரும் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வைத்து நடந்த சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் இரவு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இருதரப்பினரும் அரிவாள், கம்பு, கற்கள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் மோதி கொண்டனர்.

இந்த சம்பவத்தில் நவீன், திருச்செந்தூர் முத்தாரம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கந்தவேல் ( 21), நட்டார் ஆனந்த் (20) ஆகியோருக்கு தலை மற்றும் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் தூத்துக்குடி பூபால்ராயபுரத்தை சேர்ந்த விஜயபிரகாஷ் என்பவருக்கு (27) முதுகு, வலது காலில் வெட்டு விழுந்தது. காயமடைந்த அனைவருக்கும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் கந்தவேல் மதுரை தனியார் மருத்துவமனையிலும், நட்டார் ஆனந்த், விஜய பிரகாஷ் ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும், ஜெபராஜ், திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையிலும், நவீன் திருநெல்வேலி தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் ஏடிஎஸ்பி திபு, டிஎஸ்பி மகேஷ்குமார், ஆய்வாளர் இன்னோஸ்குமார் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் தாலுகா போலீஸார் 13 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

x