கரூர் மாவட்டம் பெரியகுளத்துப்பாளையம் ஜாமீயா நகரைச் சேர்ந்தவர் ஜேகபூர் (50). இவரது மனைவி அஜினாபேகம் (45). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். 3 நாட்களுக்கு முன் ஜேகபூரின் தாயார் உயிரிழந்தார்.
இந்நிலையில், திருச்சியில் வசிக்கும் தனது பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாதால், அவரை பார்க்க வேண்டும் என அஜினாபேகம் தன் கணவரிடம் கூறி உள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், தம்பதி இருவரும் நேற்று காலை கரூரில் இருந்து ஈரோடு- திருச்சி பயணிகள் ரயிலில் திருச்சிக்கு புறப்பட்டனர். ரயிலில் சென்று கொண்டிருந்த போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. முற்பகல் 11.45 மணியளவில் பெருக மணிக்கும் குளித் தலைக்கும் இடையே ரயில் சென்று கொண்டிருந்த போது, அஜினா பேகம் திடீரென ரயிலில் இருந்து கீழே குதித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, ஜேகபூர் பயணிகளுடன் சேர்ந்து ரயிலை நிறுத்தியுள்ளார். சிறிது தொலைவு சென்று ரயில் நின்றதும், ஜேகபூர் மட்டும் கீழே இறங்கி தனது மனைவியை தேடிச் சென்றார். ரயில் 10 நிமிடங்களில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவி்ட்டது. ஜேகபூர் மட்டும் தனியாக தேடிச் சென்று, தலையில் பலத்த காயங்களுடன் சுயநினைவின்றி கிடந்த அஜினாபேகத்தை மீட்டு, அப்பகுதி மக்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அஜினா பேகத்தை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையறிந்த திருச்சி ரயில்வே போலீஸார் அங்கு சென்று, அஜினாபேகத்தின் உடலை மீட்டு, பிரேத பிரசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதற்கிடையே, அஜினாபேகம் உயிரிழந்த தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த அவரது உறவினர்கள், ஜேக பூர்தான் ரயிலில் இருந்து அஜினாபேகத்தை தள்ளிவிட்டு கொலை செய்ததாகக் கூறி தகராறில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, அஜினாபேகத்தின் தாயார் மும்தாஜ் பேகம் (68) அளித்த புகாரின் பேரில், திருச்சி ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அஜினா பேகத்தின் உயிரிழப்பு கொலையா, தற்கொலையா என விசாரித்து வருகின்றனர்.