திண்டுக்கல் வடமதுரையைச் சேர்ந்தவர் ஜோசப் (21), வெல்டிங் தொழிலாளி. இவர் பொள்ளாச்சியில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி செவிலியராக பணியாற்றும் உறவுக்கார பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதற்கு பெண் வீட்டினர் எதிர்ப்பு தெரிவித்தால், கடந்த சில நாட்களாக இளம்பெண் இவருடன் பேசாமல் தவிர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், நண்பரான முனிசெல்வம் (20) என்பவரை அழைத்துக்கொண்டு நேற்று தனியார் மருத்துவமனை க்கு வந்த ஜோசப், இளம் பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை மருத்துவமனை ஊழியர்கள் கண்டித்து அங்கு திரண்டதால் ஜோசப்பும், முனிசெல்வமும் வெளியே ஓடினர். அவர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து மகாலிங்கபுரம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் வைத்திருந்த பையை போலீஸார் சோதனையிட்டதில், அரிவாள் மற்றும் பட்டாக் கத்தி இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸார் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.