அருப்புக்கோட்டை: ரூ.5,000 லஞ்சம் வாங்கிய விஏஓ, கிராம உதவியாளர் கைது


கைதானவர்கள்

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ, கிராம உதவியாளர் ஆகியோர் இன்று கைதுசெய்யப்பட்டனர்.

அருப்புக்கோட்டை அருகே உள்ள வதுவார்பட்டியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி (43). எலெக்ட்ரீஷியன். இவர் தனது விவசாய நிலத்தை அளந்து தரக்கோரி வதுவார்பட்டி விஏஓ அலுவலகத்தில் கடந்த வாரம் விண்ணப்பித்தார். இந்நிலையில், நிலத்தை அளந்து கொடுக்க விஏஓ வாழவந்தபுரத்தைச் சேர்ந்த இப்ராஹிம் (54), கிராம உதவியாளர் பெரியநாயகபுரத்தைச் சேர்ந்த சிங்காரம் (54) ஆகியோர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர்.

ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சின்னத்தம்பி இதுகுறித்து விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸில் புகார் தெரிவித்தார். அதையடுத்து, லஞ்ச ஒழிப்புப் பிரிவு கூடுதல் எஸ்.பி. ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸார் வதுவார்பட்டி விஏஓ அலுவலகத்தில் இன்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, நிலத்தை அளந்து சான்றிதழ் கொடுக்க சின்னத்தம்பியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ இப்ராஹிம், கிராம உதவியாளர் சிங்காரம் ஆகியோரை சுற்றிவளைத்து கைதுசெய்தனர். மேலும், அவர்களது அலுவலகத்திலும், வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர்.

x