குடியாத்தத்தில் கூலி தொழிலாளி கொலை வழக்கில் பொய் சாட்சியம் அளித்த குற்றம்சாட்டின் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முருகன் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கள்ளூர் மதுராம்பிகை நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி ஹயாத் பாஷா. இவரது மனைவி சுல்தானா. இவர்களுக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். ஹயாத் பாஷாவின் நண்பர் கள்ளூர் நேரு நகர் பகுதியைச் சேர்ந்த ஹயாத் பாஷா என்ற நாய்கடி ஹயாத்பாஷா (35). இவர்கள் இடையே முன்விரோத தகராறு இருந்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு அக். 11-ம் தேதி இரவு இருவரும் மதுபானம் அருந்திய நிலையில் ஹயாத் பாஷாவை, நாய்கடி ஹயாத் பாஷா அடித்துக்கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான புகாரின்பேரில் குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். கொலை வழக்கு தொடர்பாக நாய்கடி ஹயாத்பாஷா, சீவூர் கிராம நிர்வாக அலுவலர் ராமுவிடம் சரணடைந்ததாககூறி காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முருகன் முன்னிலையில் நடந்து வந்தது. வழக்கில் மொத்தம் 16 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர்.
வழக்கின் முடிவில் பொய் சாட்சிகள் மூலம் நாய்கடி ஹயாத் பாஷாவை குற்றவாளி ஆக்கப்பட்டார் என்பதுடன், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் நேற்று விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பொய் சாட்சி அளித்த கிராம நிர்வாக அலுவலர் ரகு மற்றும் பொய் சாட்சியத்தை தயாரித்த காவல் துறை ஆய்வாளர் பார்த்தசாரதி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் வேலூர் சரக டிஐஜிக்கு நீதிபதி முருகன் பரிந்துரை செய்துள்ளார்.
விஏஓ பொய் சாட்சியம்: கூலி தொழிலாளி ஹயாத்பாஷா கொலை வழக்கில் குற்றவாளி என கருதப்பட்ட நாய்கடி ஹயாத்பாஷாவை காவல் துறையினர் தேடி வந்த நிலையில் சீவூர் கிராம நிர்வாக அலுவலரம் ரகு முன்னிலையில் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதியில் சரணடைந்தார் என கூறப்பட்டது. மேலும், கொலையை ஏன் செய்தேன் என நாய்கடி ஹயாத்பாஷா தன்னிடம் வாக்கு மூலம் அளித்தார் என்றும், அதில் தானும், நாய்கடி ஹயாத் பாஷாவும் கையெழுத்திட்டதாக காவல் துறையின் சாட்சியங்கள் பட்டிலில் இருந்தது.
வழக்கு விசாரணையின்போது அந்த வாக்குமூலத்தை தான் தயாரிக்கவில்லை என்றும் காவல் துறையினர் தயாரித்த வாக்கு மூலத்தில் தான் கையெழுத்திட்டாக ரகு கூறியுள்ளார். வழக்கில் தான் பொய் சாட்சியம் அளித்தாக நீதிமன்ற விசாரணையில் கிராம நிர்வாக அலுவலர் ரகு ஒப்புக்கொண்டார்.
துறை ரீதியான விசாரணை: வேறு வழக்குகள் எதுவும் இல்லாவிட்டால் நாய்கடி ஹாயாத் பாஷாவை சிறையில் இருந்து விடுவிக்கலாம். கொலையான ஹயாத் பாஷாவின் மனைவி சுல்தானா மற்றும் அவர்களது 4 குழந்தைகளின் குடும்ப சூழ்நிலையை கருதி அவர்கள் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகி நிவாரண தொகை பெற்றுக்கொள்ளலாம். வழக்கில் பொய் சாட்சியம் அளித்ததாக ஒப்புக்கொண்ட கிராம நிர்வாக அலுவலர் ரகு மீது மாவட்ட ஆட்சியர் 6 மாதங்களுக்குள் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
அதேபோல், குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்ற நோக்கோடு பொய் சாட்சியம் தயாரித்த காவல் துறை ஆய்வாளர் பார்த்தசாரதி மீது வேலூர் சரக டிஐஜி விசாரித்து 6 மாதங்களுக்கு துறை ரீதியான நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என நீதிபதி முருகன் தனது உத்தரவில் கூறியுள்ளார்.